
இன்று
திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும்
பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி
பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே
இருக்காது.
அந்தக் கூழின் சுவை கடந்த சில
நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும்
தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட
இலங்கைவாசிகள்.
"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க
முடியுமா?'' என்று அறைத்தோழன் அரவிந்தனிடம் கேட்டேன். ஒழுங்காய் சோறு, கறி,
பிட்டு, இடியப்பத்தையே செய்ய மாட்டாங்கள். இந்தப் பனங்கட்டிக் கூழைப்
பற்றி இஞ்சை உள்ளவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இப்பவெல்லாம் சனம் கூழை
மறந்து; ஏன் சோமசுந்தரப் புலவரையே மறந்து போய்ச்சு எங்கட அடிப்படைப் உணவுப்
பழக்கங்களை எல்லாம் சனம் மறந்து போய்ச்சு''
என்று பெரிய ஒரு லெக்சரே அடித்தான் அரவிந்தன். எனக்குக் கூழ் ஆசையை விடமுடியவில்லை. இனி இதற்காக ஊருக்கா போக முடியும்?
நாங்கள் எதிர்பார்த்த ஆடிப்பிறப்பு
வந்தது. அன்று காலையில் இருந்தே எனக்கு ஊரின் ஞாபகம்தான் ஊரிலே அன்றைய
தினம் அங்குள்ள கிணற்றடி வைரவர் கோயில்களுக்கெல்லாம் பொங்கல் செய்து
படைப்பார்கள். பால்றொட்டி, வடை, முறுக்கு, அரியதரம் போன்ற பலகாரங்களை
எல்லாம் சுட்டு அயலவர்களுடன் பகிர்ந்து உண்பார்கள்.
இந்தப் பலகாரங்கள் கூட இப்போ பலருக்கு
மறந்திருக்கும். இதுதவிர பனங்கட்டிக் கூழ் காய்ச்சுவார்கள். கொழுக்கட்டை
அவிப்பார்கள். இது ஆடி மாதம் பூராகவும் தொடர்ந்தபடிதான் இருக்கும்.
எங்களுக்கெல்லாம் ஒரே வேட்டைதான். அதெல்லாம் ஒரு காலம்?
"மச்சான் பின்னேரம் வேலை முடிஞ்சு வந்த
உடனே ரெடியாய் இரு. நாங்கள் வெள்ளவத்தையில் இருக்கிற என்னுடைய சித்தப்பா
முறையான ஒருவரின் வீட்டை போவம்'' என்றான் அரவிந்தன்.
"இல்லை மச்சான் சுகுமார், என்று எனக்கு
தெரிந்தவர் பம்பலப்பிட்டியில் இருக்கிறார் அங்கை போவம்'' என்று நான்
கூறினேன். "இல்லை மச்சான் சித்தப்பா வீட்டை போவம்'' என்று மீண்டும்
அரவிந்தன் கூறினான். எனக்கு கோபம் வந்தது.
"உங்கட சித்தப்பா வீட்டிலை கட்டாயம்
கூழ் காய்ச்சுவினமோ'' என்று ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தேன். அரவிந்தன்
யோசித்தான். பின்பு அதே கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்டான்.
"உன்ரை சுகுமார் வீட்டிலை கட்டாயம்
கூழ் காய்ச்சுவினமோ?'' எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. "போன வருசம்
சித்தப்பா வீட்டிலை கூழ் காய்ச்சினவை. நான் தற்செயலாகப் போன போது எனக்கு
கூழ் கிடைத்தது'' என்றான் அரவிந்தன். சரி என்று அவனது விருப்பப்படியே
சித்தப்பா வீட்டுக்குப் போவதாகத் தீர்மானித்துக் கொண்டோம்.
அன்று மாலை நானும் அரவிந்தனும்
சீவிச்சிங்காரித்துக் கொண்டு சித்தப்பா வீடு நோக்கிப் புறப்பட்டோம்.
"போகும் போது வெறுங்கையுடன் போகக்கூடாது'' என்றான் அரவிந்தன். நான் உடனே
கடையில் ஒரு பிஸ்கட் பெட்டி ஒன்றை வாங்கிக் கொண்டேன். அதாவது பண்டமாற்று
முறை. நாங்கள் பிஸ்கட்டைக் கொடுத்து கூழ் குடிக்கப்போகின்றோம். குசேலர் கூட
கிருஸ்ணனைக் காணப் போகும் போது அவலுடன்தான் போனாராம்.
அங்கே போய்ச் சேர்ந்த போது எங்களுக்கு
நல்ல வரவேற்புக் கிடைத்தது. பலதரப்பட்ட விடயங்களையும் பேசிக்கொண்டோம். எனது
கண்கள் எப்போது கூழ் வரும் என்று அடுக்களைப் பக்கம் நோக்கியபடியே
இருந்தது. பிஸ்கட் தந்தார்கள், கேக் தந்தார்கள், தேநீர் தந்தார்கள். கூழ்
மட்டும் வரவே இல்லை.
"ஒருவேளை ஆடிப்பிறப்பை கேக்
வெட்டித்தான் கொண்டாடினார்களோ?'' இருந்தே இருந்து பார்த்தோம் கடைசியில்
பொறுமை இழந்த அரவிந்தன். "இன்றைக்கு மாதப்பிறப்பெல்லோ'' என்று கேட்டான்
அவர்கள் கலண்டரைப் பார்த்துவிட்டு "இன்றைக்கு பதினாறாம் திகதிதானே''
என்றார்கள்.
"அடியடா பிறப்படலையிலை எண்டானாம்''
போய்ச்சு.. கூழ் ஆசை போய்ச்சு. அப்போது சித்தப்பாதான் சுதாகரித்துக்
கொண்டு. "இண்டைக்கு ஆடிப்பிறப்பு அது எனக்கு தெரியும். இஞ்சை
என்னத்தைத்தான் செய்யிறது?'' என்று சலித்துக் கொண்டார். துணைக்கு அவரது
மனைவியும்.
"போன வருசம் கூழ் காய்ச்சி ஒருத்தருமே
குடிக்கேல்லைத் தம்பி. இந்தப் பிள்ளைகளுக்குக் கூழ், கஞ்சி
ஒத்துக்கொள்ளாது. எந்த நேரமும் ஐஸ்கிறீமை, யோக்கடை வாங்கி வைச்சு
சாப்பிட்டுப் பழகிவிட்டுதுகள்'' என்று கூறிய போது நான் அரவிந்தனைப்
பார்த்தேன். அவனைப் பிடித்துச் சாப்பிடவேண்டும் போல இருந்தது. இருவருமாக
விடைபெற்றுக் கொண்டாம். வெளியே வீதிக்கு வந்த பின்னர்...
"மச்சான் நீ சொன்ன சுகுமார்
வீட்டுக்குப் போய்ப் பார்த்தார் என்ன? என்று என்னைப் பார்த்துக் கேட்டான்
அரவிந்தன்'' இப்போ நான் விட்டாலும் அவன் விடவில்லை. "சரி'' என்றேன்.
இருவருமாக மீண்டும் ஒரு பிஸ்கற் பெட்டியை வாங்கிக் கொண்டு சுகுமார் வீடு
நோக்கிப் புறப்பட்டோம்.
சுகுமாரும் மனைவியும் எங்களை
முகமலர்ச்சியோடு வரவேற்றார்கள். அவராகவே இன்றைக்கு "ஆடிப்பிறப்பு'' என்றும்
அதன் சிறப்புக்களையும், அதை எப்படி எல்லாம் கொண்டாடுவோம் என்று சொல்லிக்
கொண்டே வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இவர் எப்போது கூழ்பற்றிக் கூறுவார்? என்று காத்திருந்தேன். பயன் இல்லை. இறுதியாக நானே சுகுமாரின் மனைவியிடம்
"நீங்கள் ஆடிப்பிறப்புக்கு கூழ் ஒன்று காய்ச்சுவதில்லையா?'' என்று கேட்டேன்.
""ஆ.... கூழ்'' ""இந்த
மரவள்ளிக்கிழங்கு, நண்டு, இறால் எல்லாம் போட்டுக் காய்ச்சு வாங்களே
அதுவா?'' என்று கேட்ட போது நான் மயங்கி விழாத குறைதான்.
"அ அதுவும் கூழ்தான்........ இ..இது வேறை கூழ்'' என்றான் அரவிந்தன்.
""எட தம்பி என்ரை மனிசிக்கு கொழும்பு
வந்த பிறகு தான் சமைக்கவே தெரியும் அதுகும் நான் சொல்லிக் கொடுத்துத்தான்.
நந்தினிக்கு கூழ் மட்டுமில்லை கொழுக்கட்டையும் செய்யத் தெரியாது'' என்னறார்
சுகுமார்.
"சரி சரி அடுத்த தடவை ஊருக்குப் போட்டு
வரும் போது கூழ் காய்ச்சுவது எப்படி? என்று அறிஞ்சுகொண்டு வாங்கோ'' என்று
கூறியபடி நாங்கள் எழுந்த போது.....
"இல்லை இல்லை கட்டாயம் இருந்து
சாப்பிட்டு விட்டுத்தான் போகவேணும்'' என்று கூறி பிட்டு அவித்துத்
தந்தார்கள். நாங்களும் கூழுக்குப் போய்... பிட்டை நிரப்பிக்கொண்டு வீடு
வந்து சேர்ந்தோம்.
"மச்சான் நாங்கள் கல்யாணம் முடிக்கும்
போது நல்லாய் சமைக்கத் தெரிந்த பெண்ணாகத்தான் கட்டவேணும்'' என்று கூறினான்
அரவிந்தன். எனக்குச் சிரிப்பாக இருந்தது. ஏதோ கூழ் கிடைக்கவில்லை என்ற
ஆதங்கத்தில் சொல்லுகிறான். நாளைக்கு எல்லாம் சரியாப் போகும் என்று
நினைத்துக் கொண்டேன்.
கூழ் ஆசையை தற்காலிகமாக ஒத்திவைத்துக்
கொண்டோம். ஆடி மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது. கூடவே
எங்கள் கூழ் ஆசையும் தான்.
அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை. அதிகாலையிலேயே அவசரமாக என்னை எழுப்பினான் அரவிந்தன்.
"மச்சான் இண்டைக்கு நாங்கள்
கூழ்குடிக்கப் போகின்றோம்'' என்றான். இரவு முழுவதும் கூழைப்பற்றியே கனவு
கண்டு இருப்பான் போலட இருக்கிறது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
"மச்சான் நல்ல ஒரு ஐடியா!! கூழுக்குத்
தேவையான சாமான்களை கடையிலை வாங்குவம். அதைப் பக்கத்து வீட்டு அன்ரியிட்டை
கொடுத்தால் கூழ் காய்ச்சித் தருவா'' என்றான்.
"அன்ரிக்கு கூழ் காய்ச்சத்
தெரிந்திருக்குமா?'' என்று கேட்டேன். "ஓம் மச்சான் அதுகள் நவாலி,
சங்கரத்தையைச் சேர்ந்த சனம். கட்டாயம் தெரிஞ்சிருக்கும்'' என்றான்.
"நவாலி'' என்றவுடன் எனக்கு நம்பிக்கை வந்தது. "சோமசுந்தரப்புலவர் பிறந்த ஊர் அல்லவா?
அவர்களுக்கு கட்டாயம் ஆடிக் கூழைப்
பற்றித் தெரிந்திருக்கும். அன்று மாலை அதற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்
கொண்டு அன்ரி வீட்டுக்குச் சென்றோம். அன்ரிக்கு ஏதோ விளங்கியிருக்க
வேண்டும்.
"தம்பிமாருக்கு என்ன செய்துதர
வேணும்?... ஐசிங் கேக்கா? புருட்கேக்கா? பலூடாவா? மஸ்கெற்றா? பால்க்
கோவாவா? சூசியமா? அல்லது சில்லிப் பராட்டவா? பூரியா, சப்பாத்தியா?
சொல்லுங்கோ தம்பிமார் என்ன செய்து தரவேணும்?....'' ""ஆ இதுகள் எல்லாம்
தின்பண்டங்களா? இதுகளைப் பற்றி எல்லாம் எங்களுக்கு எதுகுமே தெரியாது?''
என்று சொல்ல நினைத்தேன் சொல்லவில்லை.
அரவிந்தன் இந்த அதிர்ச்சியில் இருந்து
மீளவே இல்லை. உண்மையாகவே அன்ரி ஒரு சமையல் புயல்தான், நிச்சயமாக இன்று கூழ்
குடிக்கலாம். என்று நினைத்துக் கொண்டேன். நான் சுதாகரித்துக் கொண்டு..
"அன்ரி அவ்வளவிற்குச் சிரமப்பட வேண்டாம். எங்களுக்கு ஆடிக்கூழ் காய்ச்சித்
தரமுடியுமா? என்று கேட்டேன்.
"ஆடிக்கூழா......?''
"ஓம் அதுதான் சோமசுந்தரப் புலவர் பாடினாரே பனங்கட்டிக்கூழ்'' என்றேன்.
"யார் சோமசுந்தரப் புலவர்?'' என்று கேட்டாள் அன்ரி.
எனக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.... அதன் பிறகு அரவிந்தன்தான் பேசினான்.
"இது பயறு, பனங்கட்டி தேங்காய் எல்லாம் போட்டுக் காய்ச்சுவாங்களே அது தான்'' என்றான்.
"....அ... அது ஊரிலை சின்னனிலை
ஒருக்கால் குடிச்சிருக்கிறன். ஆனால் அது எப்படி செய்கிறது எண்டு எனக்குத்
தெரியாது'' என்று கையைப் பிசைந்து கொண்டாள். பேசத் தெரியாதவன் ஆங்கிலம்
பேசின மாதிரித்தான் என்று நினைத்துக் கொண்டு,
"சரி போகட்டும் எங்களுக்கு பால்க்கோவா தேவைப்படும் போது வாறம் அன்ரி'' என்று கூறியபடி விடைபெற்றுக் கொண்டோம்.
வெளிநாடுகளில் இருந்து எல்லாம் பலர்
தங்கள் பெற்றோருக்கு இப்படி ""ஒடியற்கூழ், பனங்கூழ் எல்லாம் குடிக்க ஆசையாக
இருக்கிறது என்று கடிதம் எழுதியதை எல்லாம் நான்
கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆனால் இந்த இரண்டுங்கெட்டான்
கொழும்புவாழ் பெருங்குடி மக்கள் மட்டும் எங்கள் வாழ்க்கை முறையையே
மறந்துட்டார்கள் என்று நான் ஆதங்கப் பட்டேன். அப்போது "உனக்கு ஒருத்தரும்
கூழ்காய்ச்சித் தரவில்லை என்ற கோவம் மச்சான்'' என்றான் அரவிந்தன்.
நாங்கள் மீண்டும் அறைக்கு வந்த கையோடு
அரவிந்தன் மண்ணெண்ணைக் குக்கரை எடுத்து அடுப்பை மூட்டினான். சருவத்தை
வைத்துத் தண்ணீர் ஊற்றினான்.
"எடேய் என்ன செய்யப் போறாய்?'' என்றேன்.
"நீயே பார்... கூழ் பெரிய கூழ்? எனக்கு கொஞ்சம் சமையல் தெரியும். இண்டைக்கு எப்படியும் கூழ்குடிக்கிறது தான்'' என்றான்.
சருவத்து நீர் கொதித்ததும் பயறை
அதற்குள் போட்டு அவித்தான். பயறு அவிந்து வந்த போது, தேங்காய்ப்பாலையும்
விட்டு அரிசிமாவையும் போட்டுக் கலக்கினான். நான் பனங்கட்டியை வெட்டிக்
கொடுத்தேன். அதனையும் உள்ளே போட்டுக் கொதிக்க விட்டான்.
அப்போது தான் ஞாபகம் வந்தது. தேங்காய்
ஒன்றை உடைத்து, சொட்டாக்கி அதை நறுக்கி உள்ளே போட்டுக் கலக்கினோம். கூழின்
வாசனை மூக்கைத் துளைத்தது. எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"மச்சான் ஆடிக்கூழ் லேசாய் உறைக்கிறது
தானே? அதற்கு என்ன போட வேண்டும். என்று கேட்டேன். ""வேறை என்ன செத்தல்
மிளகாயை இடித்துப் போடவேண்டும்'' என்றான்.
அந்தப் பதிலினால் அன்றைய அந்த ஆடிக்கூழில் பெரிய ஒரு திருப்பமே ஏற்படப் போகின்றது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
மிளகாய் இடித்துப் போட்டு
கூழைக்காய்ச்சி இறக்கி வைத்தான் அரவிந்தன். அந்தக் கூழைக் குடித்தது முதல்
குடல் எல்லாம் எரிந்து இரண்டு நாள்களாய் ஒரே வயிற்றுப் போக்கு. கூழாசை
குடலைக் கொண்டு போகப் பார்த்தது. நல்லகாலம் தப்பித்தோம்.
பிறகுதான் நாங்கள் தெரிந்து கொண்டோம்,
"கூழுக்கு மிளகு, சீரகம், ஏலக்காய் இடித்துப் போட வேண்டும். அது எங்களைப்
போன்ற "அவசரக் குடுக்கைகளுக்கு' சரிப்பட்டு வராது தான்.
"ஆடிக்கூழைத் தேடிக்குடி என்று ஆச்சி
அடிக்கடி கூறுவாள். அங்கெல்லாம் தேடாமலே கூழ் கிடைக்கும். இங்கு தேடினாலும்
கூழ் கிடைக்கவில்லை. அவரவர்க்கு அளந்தளவுதான் எல்லாமே. ஒருவாறு ஆடிமாதமும்
நிறைவு பெற்றிருந்தது. கூடவே கூழ் ஆசையும் தான். மீண்டும் அடுத்த வருடம்
ஆடிமாதம் வரும் ஊருக்குப் போய், சந்தோசமாக ""கூடிப் பனங்கட்டி கூழும்
குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம்'' என்று நினைத்துக் கொண்டோம்....!''
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar