தமிழ் அரசாங்க உயரதிகாரியின் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்கும்படி கூறிய இந்தியப்படை அதிகாரி (அவலங்களின் அத்தியாயங்கள்- 31) –நிராஜ் டேவிட்

எனக்கு அறிமுகமான ஒரு டெலோ முக்கியஸ்தர் தெரிவித்த கதை இது. அவரின் இயக்கப் பெயர் கிறிஸ்டி. இந்தியப் படையினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் அந்த நபர் டெலோ அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தார்.
புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் மிகவும் உக்கிரமான சண்டைகள் நடைபெற்று முடிந்து யாழ் குடாவினுள் இந்தியப் படையினர் நுழைந்த பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது.
பரவலாக நிலைகொண்டிருந்த இந்தியப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கெரில்லாத் தாக்குதல்களை அங்காங்கு மேற்கொண்டபடி இருந்தார்கள். அந்தத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்குடன் தமிழ் இயக்கங்கள் களமிறக்கப்பட்டிருந்தன.
வடக்கு கிழக்கில் முக்கிய இடங்களில் முகாம் மற்றும் அலுவலகங்கள் அமைத்து இந்தத் தமிழ் இயக்கங்கள் நிலைகொண்டிருந்தன. இவ்வாறு நிலைகொண்டிருந்த தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்தியாவின் பாதுகாப்பில்..
வவுனியாவில் நிலைகொண்டிருந்த டெலோ அமைப்பினர் தமது அலுவலகத்தின் உள்ளே பிரதான நுழைவாயிலுக்கு அருகே இவ்வாறு பொறித்திருந்தார்கள்: “ஈழத்தின் பாதுகாப்பு இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது”.
அந்த அலுவலகத்திற்கு இந்தியப் படையினரின் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தில் வந்திறங்கிய இந்தியப் படை இடை நிலை அதிகாரி ஒருவர் அலுவலகத்தினுள் சென்று அலுவலகத்தில் இருந்த டெலோவின் வவுனியா பொறுப்பாளரிடம் இந்தியப் படை உயரதிகாரி சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தியப் படையின் ஜீப்பிலேயே இந்த டெலோ முக்கியஸ்தரும் இந்தியப் படைத் தலைமைக் காரியாலயத்திற்குச் சென்றார். அங்கு புதிதாக ஒரு இந்தியப் படை உயரதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்று இருந்தார். அவருக்கு அருகில் தமிழ் இயக்கங்களுக்கு பொறுப்பான றோ அதிகாரியும் இருந்தார்.
டெலோ முக்கியஸ்தரை புதிய அதிகாரிக்கு அறிமுகம் செய்த அந்த றோ அதிகாரி,சிறிது நேரம் கலந்துரையாடிய பின்னர் ஒரு பணியை அந்த டெலோ முக்கியத்தரிடம் ஒப்படைத்தார்.
வவுனியாவில் கடமையாற்றும் ஒரு அரச உயர் அதிகாரி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருவதாகவும் அவரைக் கடத்தவேண்டும் என்பதே அவர் இட்ட பணியாக இருந்தது. “அந்த அதிகாரியை இரகசியமாகக் கடத்தி மறைத்து வைத்திருக்கும் அதேவேளை, அவரது இளம் மனைவியையும் மகளையும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம்” என்று புன்முறவலுடன் அந்த றோ அதிகாரி தெரிவித்தார்.
புகைப்படம் எடுங்கள்
அந்த அதிகாரி இறுதியாகக் கூறியதை அந்த டெலோ பொறுப்பாளர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு பேச்சுக்குக் கூறுகின்றார் என்று நினைத்திருந்தார். ஆனால் அந்த அதிகாரி தொடர்ந்து கூறியது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“அவரது மனைவியையும், மகளையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அவர்களை நிர்வாணமாகவும், அவர்களுடன் நீங்கள் ஒன்றாக இருப்பது போன்றும் புகைப்படம் எடுத்து அவருக்கு காண்பித்து அவரை மிரட்டி அவரை உங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
அவருக்கு விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் அறிமுகம் இருக்கின்றது. அவரை வைத்து அவருக்கு அறிமுகமான புலி முக்கியஸ்தர்களை வரவழைத்து பிடிக்கமுடியும். அதவேளை அவரையும் எமக்குச் சாதகமாகச் செயற்படவைக்க முடியும்.” என்று கூறியிருந்தார்.
அந்த டெலோ பொறுப்பாளருக்கு திகைப்பாக இருந்தது. ஒரு உயரிய நோக்கத்திற்காகவே அந்த பொறுப்பாளர் தன்னை போராட்டத்தில் இணைத்திருந்தார். தனது இனம், தனது தேசம் விடுதலையடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அவர் போராட முன்வந்திருந்தார். அசந்தர்ப்பவசமாக அவர் தன்னை இணைத்து கொண்டிருந்த அமைப்பு பிழையான வழிநடத்தல்களால் திசைமாறிச் சென்றுவிட்டிருந்தது.
தனது அமைப்பைத் தடைசெய்த, தனது சக போராளிகளைக் கொலை செய்த விடுதலைப் புலிகளைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் கோபமும் அவரிடம் காணப்பட்டது உண்மைதான். அதற்காக அந்த அன்னிய அதிகாரி கூறியது போன்று தனது இனத்திற்கு எதிராக இதுபோன்ற ஒரு கொடுமையை செய்வதற்கு அவர் தயாராக இருக்கவில்லை.
குறிப்பாக அந்த இந்திய அதிகாரி குறிப்பிட்ட அந்த தமிழ் அரசாங்க உயரதிகாரி உண்மையிலேயே ஒரு கண்ணியவான். கடமை உணர்ச்சி கொண்டவர். நேர்மையான அதிகாரி. இனப்பற்று கொண்டவர். அவரை துன்பப்படுவத்துவது தனது இனத்திற்குச் செய்யும் துரோகம் என்பது அந்த டெலோ போராளிக்கு நன்கு புரிந்தது.
ஆனாலும் அவர் அன்றிருந்த நிலையில், இந்தியப் படையினரை எதிர்த்து அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதிலும் குறிப்பாக அவர் சார்ந்த டெலோ அமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களின் இருப்பு, பாதுகாப்பு, எதிர்காலம் அனைத்துமே இந்தியப்படையினரிலேயே தங்கியிருந்தது.
அதிகாரி கடத்தப்பட்டார்
அந்த இந்திய அதிகாரி இட்ட பணியை செய்வதாகக் கூறிவிட்டு அலுவலகம் திரும்பினார். அவர் மனதில் பெரிய போராட்டம். கடைசியில் ஒரு முடிவிற்கு வந்தார். அந்த அதிகாரி கூறியபடி செய்வதில்லை என்று தீர்மாணித்தார். என்ன நடந்தாலும் பறவாயில்லை என்று முடிவெடுத்தார்.
மறுபடியும் இந்திய அதிகாரி தன்னை அழைத்துக் கேட்டால் என்ன பதில் கூறுவது என்று தன்னைத் தயார்படுத்திக்கொண்டார். இந்திய அதிகாரியை எதிர்க்காமலும், அதேவேளை தனது அமைப்பையும் விட்டுக்கொடுக்காமல் எவ்வாறு பதில் அளிப்பது என்றும் யோசித்து வைத்திருந்தார்.
அதேவேளை அந்த தமிழ் அரசாங்க அதிகாரியை எச்சரித்து வேறெங்காவது அனுப்பிவைக்கவேண்டு; என்றும் அவர் யோசித்திருந்தார். இந்திய அதிகாரி தன்னைத் தொடர்புகொள்ளட்டும் என்று காத்திருந்தார். ஆனால் இந்திய அதிகாரி அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ளவேயில்லை.
சிறிது நாட்டகளில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. குறிப்பிட்ட அந்த தமிழ் அதிகாரியை விடுதலைப் புலிகள் கடத்திவிட்டதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.
ஓரிரு நாட்களின் பின்னர் மீண்டும் தனது கடமைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்த அந்த அதிகாரி முற்றிலும் இந்தியப் படையினருக்குச் சாதகமாக செயற்பட ஆரம்பத்திருந்தார்.
அந்த டெலோ பொறுப்பாளருக்கு உண்மை விளங்கிவிட்டது.
தான் செய்யத்தயங்கிய பணியை வேறு ஒருவர் செய்திருக்கவேண்டும் என்று அவருக்கு புரிந்தது. ஈ.என்.டீ.எல்.எப். அமைப்சேர்ந்தவர்கள் அந்த தமிழ் அரசாங்க அதிகாரியைக் கடத்திவத்து மிரட்டி பின்னர் அவரைப் பயன்படுத்தியதாக பின்னர் தெரியவந்தது.
பன்றியுடன் சேர்ந்து இயக்கங்கள்..
இதுபோன்று பல சம்பவங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றன. தமிழ் அமைப்புக்களைப் பயன்படுத்தி இந்தியப் படையினர் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டார்கள்.
ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிரான ஒரு வேகத்தில் களம் இறங்கியிருந்த தமிழ் அமைப்புக்கள் காலஓட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு ஆக்கிரமிப்புப் படைகளாகத் தம்மை மாற்றிக்கொண்டு, இந்தியப் படையின் அனைத்து அட்டூழியங்களுக்கும் துணைபோக ஆரம்பித்தார்கள்.
பன்றியுடன் கூடிய பசுவும் “எதுவுவோ” தின்னும் என்கின்றதைப் போன்று, இந்தியப் படையினருடன் சேர்ந்து திரிய ஆரம்பித்த தமிழ் அமைப்பு உறுப்பினர்களும், ஹிந்தியுடன் சேர்ந்து இந்தியப் படையினரின் மற்றய அடாவடித்தனங்களையும் பழக ஆரம்பித்தார்கள்.
nirajdavid@bluewin.ch
(L.SRI) G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar