கனகராயன்குளத்துக்கு ஆபத்து

essay 1990ஆம் ஆண்டிலிருந்து வன்னியை மையப்படுத்திய போர் அதிக தடவைகள் கனகராயன்குளத்தைக் காயப்படுத்தியது.
 நமது கிராமங்கள் வேகமாக மூழ்கிக்கொண்டிருக்கின்றன. அதிகாரத்தின் அதி உச்ச பலத்திலிருந்து பிறந்திருக்கும் ஏதோ ஒன்று கிராமங்கள் பட்டப்பகலில் சூறையாடப்படுவதைக் கூட பார்த்துக் கொண்டிருக்கச் செய்திருக்கின்றது. 
 
எம் பாட்டன், பாட்டி, தாய், தந்தை வாழ்ந்து பழகிய நிலம் நமது காலத்தைக் கடன் கொடுக்க வலிந்து தயாராகிக் கொண்டிருக்கின்றது. 
 
பரவி வரும் ஆபத்து
எமது தலைமுறைக்கும், எமது அடுத்த காலத்தவர்க்கும் அங்கு வாழ்வதற்கான ஆதாரங்கள் மறுக்கப்படும் சூழலுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கின்றோம். வன்னியிலிருக்கின்ற மிகப் பழைமையான தமிழக் கிராமங்கள் இவ்வாறானதொரு சிதைவை அடைந்திருக்கின்றன.
 
 அரசியல் கட்சிகளினதும் ஊடகங்களினதும் மிகக்குறைவான பார்வையைப் பெறும் கிராமங்கள் இந்தத் துணிகர வேட்டையாடலுக்கு உள்ளாகிவருகின்றன. அனுராதபுரத்தை அடுத்து வருகின்ற பாரம்பரிய தமிழ் இராச்சியத்தின் தென் எல்லையான வவுனியா மாவட்டம் 1970ஆம் ஆண்டுகளில் இருந்து திட்டமிட்ட வகையிலான சிங்கள மயமாக்கலை எதிர்கொண்டிருந்தது. 
 
குறித்த மாவட்டத்தின் தென்பகுதியிலிருந்த மகாவன்னி தற்போது முற்றுமுழுதான சிங்கள மக்களின் கிராமங்களாகிவிட்டது. அத்தோடு அங்கிருந்து விரைவான பெரும்பான்மைப் பரம்பலை விரிவுபடுத்தியும் வருகின்றனர். 
 
கனகராயன்குளமும் சிக்கியது
இப்போது இந்த விரிவுபடுத்தலானது வவுனியா மாவட்டத்தின் வடஎல்லையில் இருக்கும் கனகராயன்குளம் வரைக்கும் வளர்ந்து விட்டது. வேறுவகையில் கூறுவதானால் வவுனியா மாவட்டம் முழுதும் சிங்கள வாசனையைப் பெற்றுவிட்டது. கனகராயன்குளம் வவுனியா நகரத்திலிருந்து 30 கிலோ மீற்றர் தூரத்தில், ஏ9 சாலையை மையப்படுத்தி அமைந்திருக்கின்றது. 
 
வன்னியின் தனி அடையாளமான குளங்கள் இந்தக் கிராத்தையும் தனித்துவமாக்குகின்றன. 
வவுனியா வடக்குப் பிரதேச செயலகத்துக்குள் வரும் இந்தக் கிராமம் வடக்கு தெற்கு என இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 400 வரையிலான குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் விவசாயம், நன்னீர் மீன்பிடி, வணிகம் போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
 
 போருக்குப் பின்னரான அபிவிருத்தி இதனையும் பெரு நகரமாக்கி, போரின் ஓட்டை  உடைசல்களைப் பூசிமெழுக முயற்சிக்கின்றது. அதிகளவான கட்டடங்கள் மின்னல் வேகத்தில் முளைத்து வளர்கின்றன. ஏ9 சாலையில் பயணிக்கும் ஒருவர் கனகராயன்குள மக்களுக்கு வசந்த காலம் பிறந்து விட்டது என்று எண்ணுமளவுக்கு கட்டடங்களும், கடைகளும் மாயஜாலம் காட்டுகின்றன.
 
 ஆனால் ஆழ ஊடுருவி பார்த்தால் பெரும் ஆபத்தை அந்தக் கிராமம் எட்டியிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
 
வரலாற்றைத் தவறவிட்ட 
கனகராயன்குளம்
 
கனகராயன்குளம் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் எங்கும் இல்லை. 1895ஆம் ஆண்டில் வன்னி மாவட்டத்தின் விவரம் (manual of vanni district) என்ற நூலை எழுதிய ஜே.பி லூயிஸ் என்பவர் மட்டும் சில ஆதாரங்களைத் தருகின்றார். அது பிரிட்டிஷ் நிர்வாகவியலாளரும், தொல்லியலாளருமான பாக்கரின் கருத்தைத் தழுவியதாக இருக்கின்றது.
 
அதாவது கனகராயன் குளம் கி.பி. முன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், அதற்குச் சான்றாக அந்தக் கால குள அமைப்பு முறை அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட் டிருக்கின்றார். இதனையே லூயிஸிம் கூறி அந்தக் குளத்தின் பின் பக்கமாக உள்ள காட்டுக்குள் பழைய கட்டடங்களின் இடிபாடுகள் இருப்பதைத் தான் தரிசித்ததாகவும், அது மத சார்புடையதாகவோ அல்லது பண்டைய குறுநில மன்னர்களுடையதாகவோ இருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
இடப் பெயரில் இருக்கின்றது தமிழர் வரலாறு
இந்த இடத்தின் பெயரோடு வரும் கனக என்பது தமிழ்ச் சொல் ஆகும். கனகன், கானகன் போன்ற தமிழ் பெயர்கள் இன்றும் நம்மத்தியில் புழக்கத்திலிருப்பதைக் காணலாம். அதற்குப் பின்னால் வரும் ராயன் என்ற சொல்லும் தமிழ் வரலாற்று மரபில் அதிகாரம் பெற்ற தலைவர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். 
 
இலங்கையிலும், தமிழகத்திலும் பண்டைய மன்னர்களால் வரையப்பட்ட கல்வெட்டுக்களில் ராயன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அந்த வகையில் கனகராயன்குளம் என்பது ஆளும் திறனுடைய தமிழ் மகன் ஒருவரினது பெயரைத் தன்னகத்தே கொண்டுள்ளது. 
 
இதற்குமேலும் சான்று தரும் வகையில் பல்லவராயன் கட்டு (கட்டு எனில் குளம்), கனகராயன் குளம், முத்துராயன்கட்டு, (ராயன் பின்னாளில் மருவி முத்துஐயனாக மாறியது) போன்றன பெயரமைப்பு வரிசையிலும், குள அமைப்பு வரிசையிலும் அமைந்திருக்கின்றது. இந்த மூன்று குளங்களையும் வரைபடத்தில் குறித்து நேர்கோடு ஒன்றை வரைந்தால் இவை கிட்டத்தட்ட ஒரே வரிசையில் வருவதைக் காணலாம். அத்தோடு மூன்றிலும் ராயன் என்ற அதிகாரத் தரப்பினைக் குறிக்கும் பின்னொட்டு சொல் வருகின்றது.
 
 ஆகவே இந்த மூன்றையும் குறித்த பிராந்தியதத்தில் எழுச்சி பெற்றிருந்த தமிழ் அரசவம்சத்தினரே உருவாக்கியிருக்க வேண்டும். ஏற்கனவே பல்லவராயன் கட்டு பல்லவ வழிவந்த தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. 
 
13ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி உருவாகிய யாழ்ப்பாண ராசதானியிலும், வன்னிச் சிற்றரசுகளிலும் கனக என்ற பெயரோடு தொடர்புடைய மன்னர்கள் இடம்பெற்றமைக்கு வலுவான சான்றுகள் உண்டு. எனவே கனகராயன்குளம் வெளிச்சம் படாத வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அது சரிவர ஆராயப்படவுமில்லை. எதுவும் உறுதி செய்யப்படவும் இல்லை.
 
போர்தான் இதற்கும் விளம்பரம்
பிரித்தானியர் பிரித்த எல்லைகளின் பயனாக வவுனியா மாவட்டத்துக்குள் அடங்கிக்கொண்ட கனகராயன்குளம், பல்வேறு குடிகளையும் தன்னுள் வைத்திருந்தது. போர் மட்டும் நடைபெறாவிட்டால் இந்தக் கிராமத்துக்கு விளம்பரம் கிடைக்காமல் போயிருக்கும். வன்னியின் பல கிராமங்களைப் போல இதுவும் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற போரினாலேயே அடையாளம் பெற்றது. 1990ஆம் ஆண்டிலிருந்து வன்னியை மையப்படுத்திய போர் அதிக தடவைகள் கனகராயன்குளத்தைக் காயப்படுத்தியது. 
 
இலங்கை அரசு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி, கண்டி வீதியைப் பிடிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கனகராயன்குளம் போரின் கேந்திர மையமாக மாறும். அந்த வகையில்தான் "ஜெயசிக்குறு' என்ற பெயரோடு அரசு ஆரம்பித்த மிக வலுவான படைத் தாக்குதலில் கனகராயன்குளம் படையினர் வசமானது. ஆனால் அந்தக் கைப் பற்றல் நீடித்திருக்கவில்லை. 
 
புலிகள் தொடுத்த மூன்று நாள் தாக்குதலில் கனகராயன் குளம் மறுபடியும் தமிழர்களின் கைக்கு வந்தது. 
 
சமாதான காலத்தோடு அங்கு வாழ்வைத் தொடங்கிய மக்கள் 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அங்கிருந்து மீண்டும் ஷெல்களினால் துரத்தப்பட்டனர். அத்தோடு வன்னி முழுவதும் இலங்கைப் படையினரின் வசமாகியது.
 
2009ஆம் ஆண்டு நிகழ்ந்த மனிதப் பேரவலத்தைத் தொடர்ந்து, 2010ஆம் ஆண்டில் மீண்டும் ஊர் திரும்பினர் கனகராயன்குளத்தவர்கள். அவர்கள் கையில் போர் எதையும் விட்டுவைத்திருக்கவில்லை. பழைய தொழிலைத் தொடங்க பலரிடம் கை, கால்களே இருக்கவில்லை. ஆனாலும் வாழ்வுடன் கடினமாகப் போராடத் தொடங்கினர். ஆனால் அவர்களின் இருப்புக்கான போராட்டத்தையும் மீறி சிங்களவர்களின் பெரும்பான்மை மயமாக்கல் விஸ்தீரணம் பெற்று வருகின்றது.
 
அம்மன் கோயிலுக்குள் 
அமர்ந்த புத்தர்
 
முதற்கட்டமாக மக்கள் தம் ஊர் திரும்பிய கையோடு பெரும் அதிர்ச்சியடைந்தார்கள். இதுவரை அந்த மக்களும், அயலூர் மக்களும் மட்டுமே வழிபட்டு வந்த அரச மரத்துக்கு கீழான அம்மன் கோயிலில் புத்தர் அழகாக அமர்ந்திருந்தார். அம்மன் காணாமல் போயிருந்தாள். ஆயினும் தேடி எடுத்து அந்த இடத்தில் அம்மனையும் இருத்தி விட்டனர் மக்கள். இப்போது அங்கு அரச மரம் இருந்த ஒரே காரணத்துக்காக இந்துக் கோயிலுக்குள் புத்தரும் இருக்கின்றார். ஆனாலும் அந்த ஆலயச் `ழலில் அவர் பிடித்திருக்கின்ற இடம் அதிகம்.
 
அந்தப் பண்பாட்டின் மையமோ?
 
இதற்கு அடுத்ததாக கனகராயன்குளத்தை அண்மித்த பகுதியில் பிரமாண்டமான பௌத்த மையம் ஒன்று 2009 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கப்பட்டு வருகின்றது. இன்னமும் அதன் நிர்மாணப் பணிகள் முடிவுபெறவில்லை. அங்கே சின்ன அறையில் வெள்ளைப் புத்தர் இருக்கின்றார். அதற்கு அண்மித்த பகுதியில் அரச மரம் அழகுபடுத்தப்படுகின்றது. அணைக்கட்டு நாளுக்கு நாள் வளர்க்கப்படுகின்றது.
 
 பச்சைப்புல் இன்னும் விரிவுபெறுகின்றது. 24 மணிநேரமும் அந்த மையத்தை மெருகூட்டும் பணியில் 261ஆம் படைப்பரிவினர் ஈடுபட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் விரிவுபெறும் அந்தப் பௌத்த கலாசரா மையம் கனகராயன்குளத்தை பௌத்தர்களின் புனித நிலம் என்று புதிதாய் வருபவர்களுக்கு விளம்பரப்படுத்தி வருகின்றது.
 
இல்லை, இது தமிழ் பண்பாடு இருக்கும் இடம்தான் என்பதை நிரூபிக்கக் கூடிய இந்து ஆலயங்கள் அதனை விட பிரமாண்டமாக இல்லாது இருப்பது குறித்த விளம்பரச் சிந்தனையை மேலும் உறுதிப்படுத்தும். அந்த மையத்துக்குப் பின்னாலிருக்கின்ற காடும் இப்போது அழிக்கப்படுகின்றது. இராணுவத்தினர் மேற்கொள்ளும் இந்தப் பணிக்கு இப்போதைக்கு காரணம் சொல்லப்படவில்லை. 
 
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம், இந்தப் புனித மையம் அமைந்திருக்கின்ற காணியின் ஒரு பகுதி கனகராயன்குளத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு உரியது என்பதுதான். மிகுதி மட்டுமே அரச காணி. இனி அவர் அந்தக் காணிக்கு உரிமை கோர முடியுமா?
 
வீதிகளின் பெயர்களிலும் ஒட்டிக்கொண்டது சிங்களம்
 
கனகராயன்குள மக்களின் வாழ்வாதாரத் தொழில் விவசாயம். அதற்கான ஊக்கத்தையும் உந்துதலையும் அளித்து வருவது விவசாயத் திணைக்களம். ஆனால் இப்போது விவசாயத் திணைக்களம் அவர்கள் வசம் இல்லை. அந்த இடத்தில்தான் பொலிஸ் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அது அரச காணி எனினும் மக்களின் அவசியத் தேவைக்குரிய நிலத்தை வேறுதேவைகளுக்குப் பயன்படுத்தியிருப்பது வேதனைக்குரியது.
 
வீதிகளுக்கு சிங்களப் பெயர்
இத்தோடு நின்று விடாமல் கனகராயன் கிராமத்துக்குள் நுழையும் கிரவல் வீதிகளுக்குக்கூட சிங்கள அடையாளம் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றது. வீதிகளுக்கு சிங்கள சிப்பாய்களின் பெயர்கள் இடப்பட்டிருக்கின்றது. கசலப்பெரோ வீதி, அனுரப்பெரேரா வீதி என அவை மாறியிருக்கின்றன. இந்த வீதிகள் முன்பொரு காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்த போராளிகளின் பெயர்களைச் சூடியிருந்தன. 
 
இப்போது அதே வீதிகள் பண்பாட்டு, வரலாற்று, சிதைவுகளுக்கான திறவுகோலாக மாறியிருக்கின்றன. கனகராயன்குளத்தை பௌத்த அல்லது சிங்கள மயப்படுத்தி வருவதில் படையினரும், பௌத்த பிக்கு ஒருவரும் முக்கிய பணியாற்றுகின்றனர். இதனைத் தடுக்க இதுவரை என்ன முயற்சிகளும் தமிழர் சார்பாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை, அரசியல்வாதிகளின் அறிக்கைகளைத் தவிர.
 
 இப்படியே போனால் இன்னும் சில வருடங்களில் தமிழ் கிராமமமான கனகராயன்குளமும் சிங்களவர்களின் கிராமமாகலாம். அது வடக்கில் அதிகாரத்தின் துணையோடு வளர்க்கப்பட்டு வரும் பௌத்த பண்பாட்டுக்கு புதிய விளக்கத்தை கொடுக்கும். இதற்கு ஏற்ற வகையில்தான் அங்கு புதிய புதிய பௌத்த பண்பாட்டு மையம் உருமாறி வருகின்றது. இதனைக் கண்டு கொள்வது யார்?
 
ஜெரா
()G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar