இலங்கை தமிழக உறவுப்பாலம்; கட்டியெழுப்பத் தயாராகும் மேர்வின்!

essay இந்த நாடு சுதந்திரம் பெறுகையில், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் போன்ற உயர்மட்டப் பதவிகளைத் தமிழர்கள்தான் வகித்தனர். சிங்கள அன்னையின் குழந்தையை இவ்வுலகத்திற்குத் தமிழ் வைத்தியர்தான் மீட்டெடுத்தார்.

அரசியல் தீர்வு என்பது நாட்டுக்குள் தயாரிக்கப்பட்ட தீர்வாக இருத்தல் அவசியம். இந்தியாவைப் போன்று மாநிலங்களாக எமது நாட்டைப் பிரிக்கமுடியாது. குறிப்பாக, மத்திய அரசிடம்தான் முக்கிய அதிகாரங்கள் இருத்தல்வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் என்ஜின் மத்திய அரசிடம் இருத்தல் அவசியமாகும். அரசியல் தீர்வு என்பது நாட்டுக்குள் தயாரிக்கப்பட்ட தீர்வாக இருத்தல் அவசியம். இந்தியாவைப் போன்று மாநிலங்களாக எமது நாட்டைப் பிரிக்கமுடியாது. குறிப்பாக, மத்திய அரசிடம்தான் முக்கிய அதிகாரங்கள் இருத்தல்வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் என்ஜின் மத்திய அரசிடம் இருத்தல் அவசியமாகும். 
கேள்வி: தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் இன்று பாரிய நெருக்கடிகள் ஏற்பட் டுள்ளன.ஆன்மீக வழிபாடுகளுக்காகச் செல்லும் சிங்கள யாத்திரிகர்கள் மீது அங்குள்ள தமிழர்கள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இந்தப் பிரச்சினையை எவ்வாறான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்க்கின்றீர்கள்?
 
பதில்: இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றுதான் தமிழ்நாடு. அங்குள்ளவர்களுக்கும் எங்களுக்குமிடையில் வரலாற்று ரீதியில் தொடர்புகள் உள்ளன. அவர்கள் எங்களை நேசிக்கின்றனர். ஒரு நாடு என்ற அடிப்படையில் பாரததேசம் எமக்கு எதிரான நாடல்ல. அந்நாடும் எம்மை நேசிக்கின்றது. 
 
 
தமிழகத்தில் சிறியதொரு குழு செய்யும் தவறுகளால் நாம்   ஒருபோதும் அந்நாட்டைப் பகைத்துக் கொள்ளப்போவதில்லை. அவர்களுக்கும் எமக்கும் இடையிலான உறவு பழைமை வாய்ந்தது. இதற்குப் பல காரணங்களும் உள்ளன. 
 
குறிப்பாக, புத்தபெருமான் இந்தியாவைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவில் பிறந்தவர் என்பதற்காக எப்போதாவது அவருக்கு நாம் வேற்றுமை செய்திருக்கின்றோமா? 
 
அதேபோல் இந்தியாவில் போன்று இங்கும் விஷ்ணு, பிள்ளையார், ஈஸ்வரி என இந்துக் கடவுள்களுக்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாம் தெய்வங்களை பக்திபூர்வமாக வழிபடுவதுடன், மதித்தும் வருகின்றோம். கதிர்காமத்து நிலமேகூட ஜனாதிபதியின் அண்ணணின் புதல்வர்தான்.
 
 ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய களனியில் நான் விஷ்ணு தேவாலயம் ஒன்றை அமைத்துள்ளேன். இப்படி இருக்கையில், நாம் எப்படி தமிழகத்துக்கும்  தமிழர்களுக்கும் எதிரானவர்களாவோம்?
 
தமிழகத்தில் சிறியதொரு குழுவே எமக்கு எதிராகச் செயற்படுகின்றது. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பல்ல.சிந்தனையின்றி ஒரு தரப்பு செய்த நடவடிக்கையே தவிர, அது நாட்டுக்கு எதிரான செயற்பாடு அல்ல என்று நான் நினைக்கின்றேன். 
 
கேள்வி: இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துள்ளபோதிலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலும் நியாயம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தால்தான் தமிழக முதல்வர்கூட இலங்கைக்கு எதிராகத் திரும்பியுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால், யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தாம் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அரசு கூறுகின்றது. அப்படியானால், இவற்றை நேரில் பார்வையிட வருமாறு தமிழக முதல்வருக்கு உங்கள் அரசு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கலாம் அல்லவா? 
 
பதில்: தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் பாரத தேசம் பெற்றெடுத்த சிறந்த குணவியல்புகளைக்கொண்ட ஒரு பெண்மனி. அவர் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
 நான் இளைஞனாக இருந்த காலத்தில், அவர் நடித்த படங்களைப் பார்த்துள்ளேன். அதுமட்டுமின்றி, இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஜி.ஆரின் படங்களையும் பார்த்துள்ளேன். ஜெயலலிதா அம்மையார் சினிமாத் துறையில் இருக்கும்போதும் இலங்கையர்களாகிய நாம் அவர் மீது அன்பு கொண்டோம். ஜெயலலிதாவின் படம் என்றால் போதும். எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு அதைப் பார்ப்பதற்கு வரிசையில் நிற்பார்கள். 
 
அவரின் சிறந்த குணவியல்புகளே  அவரை இன்று முதல்வராக்கியுள்ளது. அவர் புத்திசாலியானவர். எனவே, இலங்கைக்கு விஜயம் செய்து இங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டு, அதன் பின்னர் எமது நாடு தொடர்பில் தீர்மானமொன்றை எடுக்குமாறு நான் முதல்வருக்கு அழைப்பு விடுக்கின்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரச தரப்பினரின் நிலைப்பாடு இதுவாகத்தான் உள்ளது.
 
 அவ்வாறு இல்லாவிட்டால், எம்மைத் தமிழகத்துக்கு வருமாறு சந்தர்ப்பமொன்று வழங்கப்படுமானால் வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைத்துப் பகுதிகளினதும் நிலைவரங்களை உள்ளடக்கிய வகையில் விவரணப்படம் ஒன்றைத் தயாரித்துக்கொண்டு சென்று அவருக்குக் காண்பிக்கமுடியும். 
 
குறிப்பாக, இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு சுற்றுலா, ஆன்மீக வழிபாடுகளுக்காக வருபவர்களுக்கு எவரும் இடையூறுகளை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அம்மையார் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் நற்பண்புகளைப் பறைசாற்றி நிற்கின்றது. ஆளுமைத்திறனின் உச்சக்கட்டமே இந்த விசேட அறிவிப்பாகும். 
 
அதேவேளை, இலங்கை மக்களோ, ஜனாதிபதியோ தமிழக முதலமைச்சருடன் எதிர்ப்பைக்கொண்டிருக்கவில்லை என்ற விடயத்தையும் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன். 
 
பாரத தேசத்தின் தேசிய அன்னையாகத்தான் நாம் ஜெயலலிதா அம்மையாரைக் கருதுகின்றோம்; நாம் அவரை மதிக்கின்றோம். அத்துடன், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் உறவுப்பாலமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு நான் தயாராகவே உள்ளேன். இதற்கு  ஜனாதிபதியின் ஆலோசனையும் பெறப்படும்.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையில் பாரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. காயம் ஏற்படுவதற்கு முன்னர் வரும் சிறியதொரு கட்டி ஏற்படுவது போன்ற விடயமே இது. அதைக் குணப்படுத்துவது இலகுவான விடயம்.
 
மன்னர் ஆட்சிக் காலத்தின்போதுகூட தமிழ் மன்னர்களைத் தோற்கடித்து விட்டு ஆட்சிபீடமேறிய சிங்கள மன்னர்கள் அவர்களை மதித்தனர். இதற்கு வரலாற்றில் சான்றுகள் பல உள்ளன.
 
கேள்வி: தமிழகத்தில் இலங்கையர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, இலங்கைக்கு குறிப்பாக, கதிர்காமம்போன்ற புனித ஸ்தலங்களுக்கு வரும் இந்தியர்களைத் தாக்குவதற்கு இலங்கையர்கள் முற்படலாம் எனக் கூறப்படுகின்றதே?
 
பதில்: நீங்கள் கூறுவதுபோல் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நான்தான் சட்டத்துக்கு முதலில்  அங்கு  நிற்பேன். சட்டம் தாமதித்தாலும், நான் தாமதிக்கமாட்டேன்  என்பதை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இந்தியர்கள் மீது எமக்கு கோபம் இல்லை.
 
எமக்கு நெருங்கிய உறவினர்கள் இந்தியாவில்தான் வாழ்கின்றனர். அதிலும் தமிழ்நாடு என்பது எமது சகோதரன். இந்தியாவின் பக்கம் நாம் கைபோட்டதும் எமக்கு முதலில் அகப்படுவது தமிழகம்தான். அதன்பின்னர்தான் டில்லிபோன்ற இடங்கள். 
 
டில்லி, சீனா, பங்களாதேஷ், நேபாளம் ஆகியவற்றுடன் நாம் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும் தமிழகத்தை ஒருபோதும் மறக்கமுடியாது. எவர் என்ன சொன்னாலும் எவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்தாலும் நான் திருப்பதிக்கு வழிபாடுகளுக்குச் செல்வேன். முருகப் பெருமானின் ஆறுபடை வீடு இந்தியாவில்தான் இருக்கின்றது. அதேபோன்று, இந்தியாவை நான் நேசிக்கின்றேன். அங்குள்ள உணவுகள் எனக்கு அதிகம் பிடிக்கும். எனவே, உயிர் அச்சுறுத்தல் விடுத்தாலும் நான் அங்கு செல்வேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 
 
கேள்வி: மிருகபலி பூஜையை தடுத்து நிறுத்தும் விடயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கின்றீர்கள். எனவே, அதை நிரந்தரமாகவே தடுத்து நிறுத்துமாறுகோரி நாடாளுமன்றில் சட்டமூலம் ஒன்றையேனும் தாக்கல் செய்வீர்களா?
 
பதில்: நிச்சயம். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவந்தே தீருவேன். பகவத் கீதையில் கூட மிருகபலி குறித்து எதுவும் குறிப்பிடப்பட வில்லை. ஆனால், பணத்தைக் வசூலிப்பதற்காக  கறப்பதற்காக ஒருசில முதலாளிமார்கள் கையாளும் உபாயமே இது. 
 
கடந்ததடவை எனது ஆதரவாளர்களுடன் சென்று நான் மிருகபலி பூஜையைத் தடுத்து நிறுத்தினேன். இதனால் அவர்கள் எனக்கு எதிராகத் தேங்காய் உடைத்தனர்; யாகம் செய்தனர்; ஏன்! தற்போதுகூட தேங்காய் அடிக்கின்றனர். 
 
துர்க்காதேவி  பார்வதி தேவியின் அவதார வரிசையில் வந்தவர். இது இந்துக்களுக்கு நன்கு தெரியும். இரத்தம் குடிக்கும் கடவுள் இவ்வுலகில் இல்லை. பேய்களைப் போல் செயற்படும் ஒருசில பைத்தியக்காரர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். 
 
முன்னேஸ்வரம் மட்டுமல்ல, எந்தக் கோவிலிலும் மிருகபலிக்கு இனி இடமளிக்கப்போவதில்லை. இதையும் மீறி பூஜை நடைபெற்றால் அந்தக் கோவிலை எனது அமைச்சின் கீழ் சுவீகரித்துக்கொள்வேன்.
 
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் பள்ளிவாசலுக்குள் மிருகங்களைக் கொல்வதில்லை. இருப்பினும், அவர்கள் பலிகொடுக்கும் முறைமையில் பிழையுள்ளது. அதனைத் திருத்திக்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
 
குறிப்பாக, ஒரு மிருகத்தைக் கொல்லும்போது அது மற்ற மிருகத்துக்குத் தெரியக்கூடாது. வெட்டக்கூடிய கூரிய ஆயுதத்தால் குறித்த மிருகத்தின் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்பை வருத்தமில்லாமல் வெட்ட வேண்டும்.
 
கேள்வி: யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னும் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் படவில்லை. ஏனைய விடயங்கள் குறித்து நீங்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டாலும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுவதில்லை. அரசியல் தீர்வு விடயத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?
 
 பதில்: இந்த நாடு சுதந்திரம் பெறுகையில்,வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள் போன்ற உயர்மட்டப் பதவிகளைத் தமிழர்கள்தான் வகித்தனர். சிங்கள அன்னையின் குழந்தையை இவ்வுலகத்திற்குத் தமிழ் வைத்தியர் தான் அன்று மீட்டெடுத்தார். பொன்னம்பலம், அருணாச்சலம் போன்ற புலைமை வாய்ந்த தமிழர்கள் இங்கு வாழ்ந்தனர். 
 
எனினும், பிரபாகரன் என்ற தனி மனிதனின் தூரநோக்கற்ற செயற்பாடுகளால் தமிழ்ச் சமூகம் கல்விமான்களை இழந்து எவ்வளவு இழப்பீடுகளைச் சந்தித்தது?
அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருச்செல்வம் போன்ற தமிழ்த் தலைவர்களை புலிகள் படுகொலை செய்தனர். காத்தான்குடி பள்ளிவாசலுக்குள் புகுந்து தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை வெட்டிப் படுகொலை செய்தனர். 
 
தொடர் கொலைகளால் இந்த நாடு இரத்த வெள்ளத்தில் நனைந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டைப் பொறுப்பேற்று, தனது தம்பியையும் இணைத்துக்கொண்டு புதிய வியூகங்களுடன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். 
 
தற்போது நாம் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கின்றோம். அனைத்து இன மக்களுக்கும் ஜனநாயகக் காற்று கிடைக்கின்றது. அதேவேளை, மூன்று வருடகாலங்களுக்குள் நாம் வடக்கு  கிழக்குப் பகுதிகளில் ஏனைய பிரதேசங்களைவிட அதிகளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்; தற்போதும் முன்னெடுத்து வருகின்றோம்.
தொப்பிக்கலையை இராணுவம் கைப்பற்றியபோது அது காட்டு பிரதேசம் என்று ரணில் கூறினார். டொலர்களுக்குப் பணிந்து அவர் நாட்டைக் காட்டிக்கொடுக்க முற்பட்டார்.
 
யுத்தகாலத்தில் கதிர்காமத்தில் இருந்த தமிழர்களை நாம் தாக்கினோமா? அல்லது தமிழ்க் கிராமங்களை கொழுத்தினோமா? இல்லையே. இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. ஆனால், சிங்கள மக்களுக்குத்தான் அன்று வடக்கு பகுதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. 
 
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டன. அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். தமிழர்களுக்கு ஐ.தே.க  இழைத்த துரோகங்களுக்காக நாம் தமிழர்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும். 
அதேவேளை, யுத்தம் நடைபெறுகையில் சாதாரண மனிதர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். ஆனால், மன்னிப்புக் கோரத் தேவையில்லை. 
 
கேள்வி: நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் நேரடியான பதிலைத் தரவில்லையே? 
 
பதில்: ஆம். விடயத்திற்கு வருகின்றேன். அரசியல் தீர்வு என்பது நாட்டுக்குள் தயாரிக்கப்பட்ட தீர்வாக இருத்தல் அவசியம். இந்தியாவைப் போன்று மாநிலங்களாக எமது நாட்டைப் பிரிக்கமுடியாது. குறிப்பாக, மத்திய அரசிடம்தான் முக்கிய அதிகாரங்கள் இருத்தல்வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் "என்ஜின்' மத்திய அரசிடம் இருத்தல் அவசியமாகும். இவற்றுக்கு மாறானதொரு தீர்வு நாட்டுக்குப் பொருந்தாது என்பதைத் தெளிவாகச் சொல்லிக் கொள்கின்றேன்.
 
கேள்வி: மேற்குலகத்திற்கு எதிராக நீங்கள் காரசாரமான கருத்துகளை முன்வைத்து வருகின்றீர்கள்.தரமற்ற வெளிநாட்டுக் கொள்கைகள் காரணமாகவே அரசு சர்வதேச பிடிக்குள் சிக்கித்தவிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டுகின்றன. இது குறித்து உங்கள் கருத்து?
 
பதில்: யூரோக்களுக்கு அடிபணியாத  முதுகெலும்புள்ள தலைமை நாட்டில் இருப்பதால்தான் மேற்குலகம் எமக்கு எதிராகச் செயற்படுகிறது. வெள்ளையர்களின்  "டைக்கும்',"கோட்டுக்கும்', "டவுசருக்கும்' நாம் அடிபணிய மாட்டோம். அரசும், மஹிந்த சிந்தனையும் அடிபணியாது.
 
மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிச் செயற்படுகின்றவர்கள்தான் மனித உரிமையைப் பற்றிப் பேசுகின்றனர். எமது நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை இந்தியா, சீனா போன்ற அயல்நாடுகளுக்கு இருக்கின்றதே தவிர, ஐரோப்பியர்களுக்கில்லை என்பதைத் தெளிவாகக் கூறிவைக்கின்றோம். 
எம்மீது தவறுகள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டுங்கள், ஆலோசனை வழங்குங்கள். 
 
அதைவிடுத்து, ஏனைய செயற்பாடுகளைச் செய்ய முனையாதீர்கள். பணம் அச்சிடும் உரிமை அரசுக்குத்தான் இருக்கிறது. இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. இது ஒரு பிராந்தியமல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
 
கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். ஜே.வி.பியின் ஒரு பகுதியினர் ஐந்தாம் ஆண்டு மாணவர்களை வீதிக்கு இறக்கிப் போராடுவதற்குப் பார்க்கின்றனர். ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களுக்கு புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் கிடைக்கின்றது. கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது.
 
அன்று விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதித்துக்கொண்டு வந்து இங்கு கார், வீடு வாங்கினர். தற்போதுள்ளவர்கள் வெளிநாடு செல்வதில்லை. கடன் எடுத்து இவற்றை வாங்குகின்றனர். மாதாந்தம் கடன் தொகை அறவிடப்படுவதால் இவர்களுக்குச் சம்பளத்தில் சிறியதொகைதான் மிஞ்சும். இதனால்தான் இவர்கள் சம்பளத்தை அதிகரித்துக் கோருகின்றனர். 
 
இவர்களுக்கு அளவுக்கு அதிகமாகச் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது அவர்களுக்குச் சம்பள உயர்வு தேவையில்லை. ஒரு சில விரிவுரையாளர்களே டொலருக்குப் பணிந்து மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்றனர்.
 
கேள்வி: விசேடமாக எதையாவது கூற விரும்புகின்றீர்களா?
 
பதில்: ஹிலாரி கிளின்டண்கூட இன்று என்னைப் பற்றித்தான் பேசுகின்றார். ஊடகவியலாளர்களின் கை, கால்களை முறிப்பேன் என நான் கூறினேனாம். மக்களிடமிருந்து வரும் பிரச்சினைகளைத் தேடி அறியுமாறு கோரியே ஜனாதிபதி எனக்கு இந்த அமைச்சுப் பதவியை வழங்கினார். 
 
பொதுநலவாய நாடாளுமன்றச் சங்கத்தின் மாநாட்டிலும் என்னைப் பற்றிப் பேசியுள்ளனர். இவர்கள் விரும்பினால் என்னை நேரடியாகச் சந்தித்துப் பேசலாம். அப்போது நான் போதுமான விளக்கத்தைக் கொடுப்பேன்.
 
அடுத்த விடயம்தான், எனது மகன் இராணுவ மேஜரைத் தாக்கவில்லை என்பது. சம்பவம் நடைபெற்ற ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கமராவை பரிசோதித்துப் பார்த்தால் இந்த விடயம் தெரியவரும். முப்படையினர், பொலிஸார் ஆகியோரைப் பெரிதும் மதிப்பவன் நான். இராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து என்னைப்போல் எவரும் ஊர்வலம் சென்றிருக்கமாட்டார்கள்.
 
இளைஞர்களுக்கிடையில் மோதல் ஏற்படுவது சகஜம்தான். பிரச்சினை குறித்து நான் உண்மையைச் சொன்னால், அது எமது அரசுக்கும் இராணுவத்துக்கும் நான் செய்யும் துரோகமாகும். 
 
சீருடை இல்லாவிட்டால் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்று தெரியுமா? எனது மகனை நான் ஒளித்து வைத்திருந்தேன் எனக் கூறும் பொன்சேகா ஆயுதக் கொள்வனவின்போது நிதி மோசடியில் ஈடுபட்ட அவரது மருமகனை ஒளித்து வைத்திருப்பது ஏன்?
 
 
நேர்காணல்: ஆர்.சனத்
(U)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar