சித்தரின் நிம்மதியைக் கெடுக்கும் புத்தரின் கைமுத்திரை - குகதாசன்

என்றுமில்லாதவாறு இன்று உலகம் அமைதியற்று தவிக்கிறது. கட்டுப்பாடோ, திட்டமோ இல்லாது திறந்து விடப்பட்ட பொருளாதாரக் கொள்கை தொழில் ரீதியான மன அழுத்தத்தையும் அதிகரித்துள்ளது.
தேசியக் கட்டுப்பாடற்ற தேசங்களின் எல்லைகளைத் தாண்டும் உலக மயமாக்கல் மன அழுத்தத்தையும் மேற்கிலிருந்து கிழக்கிற்குள் இலகுவாக புகுத்திவிட்டது. ஆச்சரியப்படும் வகையில் மேல் எழுந்த முதலாளித்துவ கொள்கை உலகையே அழிக்கும் அதிர்ச்சி அளிக்கும் கோட்பாடாகிக் கொண்டிருக்கிறது.
தேசிய மற்றும் சர்வதேச அரசியல் விவகாரங்களை நிர்ணயிக்க வல்ல தவறான உலகப் பொருளாதார எழுச்சியும் மேன்பாடும் உலகையே உலுப்பிவிட்டது. இதனால் வெகுவாகப் பாதிக்கப்படடு பலிக்கடாவாக்ப்பட்ட இனமாக ஈழத் தமிழ் இனமே காணப்படுகிறது
எனவே ஈழத் தமிழினத்தின் புலம் பெயர் அரசியல் எவ்வாறு அமைய வேண்டும்? அதற்கு சர்வதேச அரசியல் சூழ்நிலையை எவ்வாறு நாம் கையாள வேண்டும் போன்ற அனைத்துக் கேள்விகளினதும் பதிலானது சர்வ தேச அரசியலை, சுட்டிப்பாக சமகால உலக ஒழுங்கை நாம் சரிவரப் புரிந்து கொள்வதிலேயே தங்கியுள்ளது.
இன்னும் சொல்லப் போனால் ஈழத் தமிழ் இனத்தின் போராட்டத்தை அழித்தொழிக்க சர்வதேச சமூகம் ஏன் அனுசரணையாக இருந்தது? என்பதற்கான பதில்களைத் தேடாது நாம் இப்போதுள்ள அரசியல் மந்த நிலையிலிருந்து ஓரடி தன்னும் நகர இயலாது.
அரசுகள் சிலவற்றின் பொய்ப் பரப்புரைகள், நமது உறுதி மிக்க எழுச்சியுடன் நமது ஒரிரு தவறுகள் இப்படி பதில்கள் பல. இது ஒரு பரந்த தேடல். இதற்கான பதில்களை கலந்துரையாட, நம் இனமே அந்த தேடலைத் தொடர வேண்டும். இது யார் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை உணர்த்த உதவலாம்.
இன்றைய நமது கேள்வி நிம்மதி தொடர்பானது. மனித இனம் என்ற சமூகப் பிராணி வர்க்கத்தின் தவறான பொருளாதாரப் போக்கானது இனங்களின் தேசிய அரசியலையும் தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது. அதாவது உலக பொருளாதாரத்தின் மையம் இன்று கிழக்கே போகும் ரயிலாகிவிட்டது.
வாழ்வதற்கு வேண்டிய உழைப்பு, இன்று உழைப்பதற்காகவே வாழ்கிறோம் என்றாகிவிட்டது. “அடம்ஸ் ஸ்மித்தின்” திறப்பு குற்றச் செயல்களின் வீதம், குடும்பத் தகராறு, விவாகரத்து விகிதாசாரம், உறவுகளின் உடைவு, இயலுமைக்கு மீறிய சுமை போன்றவற்றிற்கான கதவுகளையே திறந்து விட்டுள்ளது.
சுற்றுச் சூழலையும், பூகோள மண்டலத்தையும், உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், நாடுகளின் வீடுகளையும் இயற்கையையும், மாந்தரின் இயல்பான போக்கையும் இந்தப் போட்டிப் பொருளாதாரம் ஓய அனுமதிப்பதாக இல்லை. மேற்கண்ட காரணிகளையும், உலக நாடுகளை தரப்படுத்தும் போது “ஐ நா” கருத்திற் கொண்டால், முதலாவது உலக நாடுகள் பல நாலாவது தர இடத்திற்கு தள்ளப்பட்டு விடும்.
அமெரிக்காவில் என்றுமில்லாதவாறு வர்க்க ரீதியிலான தேர்தற் பிரச்சாரமே மேலோங்கியுள்ளது. திறந்த பொருளாதாரம், ஆண்டான்-அடிமை, ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, பாமரன்-படித்தவன், எஜமானன்-கூலியாள் போன்ற எந்தப் பேதமுமில்லாமல் அனைவரையும் நிம்மதியைத் தேடி அலைய வைத்தமையால், பூமி என்ற முழுக் கிரகமுமே அமைதியின்றி விரைந்து சுழல்கின்றது.
நிவர்த்தியும் நிவாரணமுமின்றி ஒரு தரப்பு அலைகையில், மறு தரப்போ எல்லாம் இருந்தும் மன அமைதியை தொலைத்துவிட்டு நிம்மதியின்றி அங்கலாய்க்கிறது. புதிய பறவைத் திரைப்படப் பாடலான “எங்கே நிம்மதி?” என்ற பழைய பாடல் இன்றும் ஒலிப்பதற்கான காரணம் இது தான்.
இதில் ஆசைகள் காரணமாக அழுபவர்களைவிட தேவைகள் காரணமாக வருந்துபவர்கள் பக்கம் ஓரளவாவது நியாயமிருக்கிறது. இது இப்படியிருக்க, எல்லாம் இருந்தும் நிம்மதியற்று இருப்பவர்களை என்ன செய்வது? நிறைவிருந்தும் மலர்ந்தும் மலராதவர்களின் அனாவசிய அங்கலாய்ப்பை எவ்வாறு போக்கலாம் என்பதற்காவது நாம் விடையைத் தேட வேண்டும்.
ஒரு வீடு திருப்தியாக இருந்தால் அந்தக் குடும்பமாவது அமைதி நதி ஓடமாக நகர வேண்டும். ஆனால் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் மன அமைதியற்ற மேற்குலக மாந்தர் தியானத்தையும் அதற்காக கிழக்கையும் நாடுகின்றனர். பொருளாதாரக் காந்தம் மட்டுமல்ல மேற்குலக மனங்களும் கிழக்கை நோக்கியே பறக்கின்றன.
ஏனென்றால் இன்றைய கல்வி உடலை மட்டும் பார்த்தது. உள்ளே உள்ளத்தை பார்க்கவில்லை. விஞ்ஞானத்திற்கு வித்திட்டவை கிரேக்கத்தின் ஏன்? எதற்கு? என்ற கேள்விகள் என்றால், மெய்ஞானத்தின் ஊற்று இந்தியா தான். இந்தியா சீனாவிற்கு கிழக்கே இருக்கிறது. புத்தர் மட்டுமல்ல போதி தர்மர் (ஏழாம் அறிவு) கூட சீனாவிற்கு கிழக்கிலிருந்து தான் சென்றிருந்தார். சுவாமி விவேகானந்தரும் இந்தியாவிலிருந்தே அமெரிக்காவிற்கு கப்பலேறினார்.
கிழக்கே வாழ்ந்த இந்த ஞானப் பறவைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவை புதிய பறவைகள் அல்ல – பழைய புராணப் பறவைகள்”. இதன் முதல் அடிகளோடு தான் சீனாவின் பிரபல தத்துவார்த்த வசனங்கள் தொடங்குகின்றன. …… தீப் பறவை – புராணப் பறவை. அது முதமை அடைவதேயில்லை…..என அவை வருமாறு தொடர்கின்றன.
கிழக்குக் கடலிருந்து எழுகின்ற இந்த மரணமிலா தீப்பறவை வடக்குக் கடலிற்கு பறக்கிறது. சில புனித மரங்களைத் தவிர வேறு எங்கும் அது இறங்குவதேயில்லை …. அது எதுவித உணவையும் தொடுவதில்லை. ஆனால் அது மிக அபூர்வமான பழத்தையே உணவாக்கிக் கொள்கிறது. அது தூய்மையான நீரூற்றிலிருந்து நீரைப் பருகுகின்றது.
ஆன்மா , உங்கள் உயிரின் உள் ஆழத்திலிருந்து சில புனிதமான மரங்களைத் தவிர வேறெங்கும் இறங்குவதில்லை….இந்த உள் பறவை உள் உயிர் ஒரு சில புனிதமான மரங்களில் மட்டுமே இறங்கும்……” ஆம், ஞானப் பறவைகள் எங்கே நிம்மதி என்று பறந்து தேடி அலைவதுமில்லை அழுவதுமில்லை. ஏனென்றால் அவைகளே அமைதியாக இருக்கும் போது அங்கே நிம்மதிககான தேவையே எழவில்லை.
ஆசைகளை மட்டுமல்ல தேவைகளையும் அறுத்தவர்கள் அவர்கள். இருந்த ராஜ போகங்களை துறந்த சித்தார்த்த புத்தனின் கை முத்திரை புதிதாக எதையும் கூறவில்லை. சைவ சித்தாந்தம் கூறியதை இலகுபடுத்திக் கூறுகிறது அவ்வளவு தான்.
மனம் வேறு புத்தி வேறு சித்தம் வேறு. நோய் நாடி நோய் மூலம் நாடி …… இதுவே சித்தர்களின் ஆணி வேர்.
சித்தர் ஒருவரின் நிம்மதி தொடர்பான ஒரு சம்பவத்தை பார்ப்போம்.
அன்றைய பூநகர ஏரி அரச பூங்காவில் அமைதி தேடித் தவித்துக் கொண்டிருந்த ஒரு வன்னிராணியின் கதையிது. அவள் மனம் குழம்பியிருக்கும் போது அங்கே ஒரு சித்தர் வருகிறார். சித்தரே! என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று அழுது தொழுது நின்றாள் அரசி. நீ பெண்ணரசி என்பதால் ஏதிரி நாட்டவர் எல்லையில் தொந்தரவு செய்கிறார்களா? என்று கேட்டார் சித்தரான அந்த ஞானி.
அப்படி ஒன்றும் இல்லை. எனது மண்ணில் சகல தானியங்களும் விளைவதால் பஞ்சமில்லை. விளைந்த நெல்லை வீட்டிற்குள் வைக்க இடமில்லாமல் அடி வளவிற்குள் பரனிட்டு கொட்டிலிட்டு நெற் கூடைகளை நிரப்பி வைத்துள்ளார்கள் எனது மக்கள். அடுத்த முறை விதைப்பிற்காக அதை அவர்கள் நாடும் போது, கொவ்வைச் கொடிகளை அறுத்துவிட்டே கூடையை பிரிக்க வேண்டியிருக்கும்.
இதனால் கள்வர் பயமில்லை. வரிகளும் அதிகரிக்கப்பட்வில்லை. அதிதியாக மக்கள் வாழ்கின்றனர். ஆறு வேளைப் பூஜைகளுடன் ஆலயங்களில் மணிகளும் ஒலிக்கின்றன. எல்லாம் திருப்தியாக இருக்கிறது. ஆனால் என் மனம் மட்டும் எதையோ இழந்து விட்டதைப் போல் அமைதியின்றி அலைகிறது.
தூக்கத்திலும் விழிப்பிலும், ஓய்விலும் வேலையாக இருக்கும் போதும், இந்த அடி மனம் மட்டும் எதையோ தேடிக் கொண்டும் , கேட்டுக் கொண்டும் இருக்கிறது……….ம்…… மனச் சாந்தி இல்லை என்று நிறுத்தினாள் அரசி.
நீ தானே இங்கு ராணி ….உனக்கு கட்டளையிட, வேதனைப்படுத்த யாருமில்லையே! அப்படியிருந்தும் நிம்மதியில்லையா? ……. உனக்கு அமைதியில்லையா திருப்தியில்லையா சுட்டிப்பாகச் சொல் என்று கேட்டார் சித்தர்.
அரசியாக இருந்தும் எல்லாமிருந்தும் மனம் மட்டும் அமைதியாக இல்லைச் சுவாமியே! இதற்கு மேல் என்னால் விளக்க முடியவில்லை குருவே! என்றவாறு தலை குனிந்தாள் அந்த அழகிய அரசி.
ஒ! ….அப்படியா? என்ற சித்தர் தொடர்ந்தார். நீ ஒன்று செய். உனது நாட்டை என்னிடம் கொடுத்து விட்டு நீ ஓய்வெடுத்துக் கொள் அல்லது இமயத்திற்கு போய் அமைதியாக தியானம் செய்து விட்டு விரும்பும் போது வா! நான் உனது இராஜ்ஜியத்தை திரும்பத் தந்து விடுகிறேன் எனறார்.
இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு இந்தப் பதவி, பட்டம், அதிகாரம் ஆடம்பரம் எதுவுமே வேண்டாம். தேவை நிம்மதி மட்டுமே. எங்கே நிம்மதி ? எங்கே நிம்மதி அங்கு தான் எனக்கு ஒரு இடம் வேண்டும். அது எங்கே இருக்கிறது? அதை உங்களைப் போன்ற சித்தர்கள், ஞானியர் தான் காட்ட இயலும் என்று சித்தரின் காலடியில் வீழந்தாள் மென்மையான அந்த அரசி.
அது சரி , நீ உனது நாட்டை தந்து விட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல் முதலில் என்று கேட்டார் ஞானி. நான் காட்டிற்கும் போகவில்லை, இமயத்திற்கும் போகவில்லை இந்த நாட்டிலேயே ஏதாவது வேலை செய்து கொண்டு, என் மக்களோடு மக்களாக வாழவே ஆசைப்படுகிறேன் என்றாள் அரசி.
குழந்தாய் ! நான் இப்போது யாத்திரை போய்க் கொண்டிருக்கிறேன். ஒரு வருடத்துள் திரும்பி வந்து விடுவேன். அதுவரை எனது பிரதிநிதியாக நீயே இருந்து உன் நாட்டைக் கவனித்துக் கொள். என்ன நடந்தாலும் பொறுப்பு நானே. நீ ஆள வேண்டாம் ராஜ்ஜிய பரிபாலனத்தை மட்டும் உனது கடமையாக நினைத்துச் செய். அதையும் எனக்காக எனது பிரதிநிதியாக இருந்து செய். நான் திரும்பி வந்ததும் ஆட்சியை என்னிடம் தந்து விட்டு பின்பு நீ எனது ஆட்சிக்கு துணையாக இரு. என்ன திருப்திதானே! என்றார் சித்தஞானி.
சாமிப் போக்குடைய எனக்கு நிச்சயம் உம்மைப் போன்ற உலக ஆட்சி அனுபவம் உள்ள ஒரு நிர்வாகி தேவை. நீயும் நீ நேசிக்கும் நாட்டில் பணி புரிவதால் அமைதியடைவாய். உந்த அமைதி உனக்கு மன நிம்மதியையும் தருமென்றார்.
மன்னராட்சி சித்தராட்சியாக அறிவிக்கப்பட்டு பிரகடனப்படுத்தியதும், சித்தஞானியர் புறப்பட்டு விட்டார். சித்தஞானியாரின் பாதரட்ஜையை அரியாசனததில் வைத்து அரசி பரதன் போல் அரசாண்டாள். சரியாக ஒரு வருடம் கழித்து சித்தஞானியார் திரும்பி வந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் களிப்பில் கட்டித் தழுவிக் கொண்டனர். முடியைக் கழற்றிய அரசி அதை ஞானியின் தலையில் சூடத் தயாரானாள். சற்றுப் பொறு என்ற சித்தர் முடி கிடக்கட்டும். நீ இப்போது எப்படியிருக்கிறாய் என்று முதலிற் கூறு என்று கேட்டார்.
நிம்மதியாக சந்தோஜமாக அமைதியாக ஆனந்தமாக இருக்கிறேன். இந்த நிலை நீங்கள் அரசராகியதும் மேலும் வலுவடையும் என்றாள் அரசி. அப்படியென்றால் இப்போ நிம்மதியாக இருக்கிறாய் என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்ட சித்தர் தொடர்ந்தார். முன்பு நீ செய்த ஆட்சிக்கும் பணிகளிற்கும், கடந்த ஓராணடு காலமாக எனது பிரதிநிதியாக இருந்து நீ ஆண்டதிற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா ? எனபது அவரது அடுத்த கேளிவியாக இருந்தது.
இல்லை என்று தலையசைத்தாள் அரசி. அப்போது மன அழுத்தத்ததுடன் நிம்மதியற்று இருந்தாய். இப்போதும் அதே வேலையயைத் தான் செய்வதாக நீயே கூறுகிறாய. அப்படியாயின் இப்போது மட்டும் இந்த நிம்மதி எங்கிருந்து வந்தது? என்று கேட்டார் சித்தர். பதிலின்றி திரு திருவென விழித்தாள் அரசி. ஞர்னியே தொடர்ந்தும் பேசினார்.
முன்பு இந்த நாடு உன்னுடையது அதற்கு நீயே பொறுப்பு ஏதும் நடந்தால் என்ன செய்வது என்று உன்னை அறியாமலே உன் உள்மனம் அச்சத்தில் இருந்தது. என்ன நேருமோ ஏதோ என்ற கலக்கம் உன் ஆழ் மனதில், சித்தத்தில் ஓடிக் கொண்டிருந்தது. எப்போ அதை உன்னுடையது அல்ல சித்தரது நாடு என நினைத்ததாயோ அந்தக் கணத்தில் இருந்து அந்த அச்சமும் கலக்கமும் இல்லாமற் போய் விட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது இல்லையா என்று உரத்த குரலில் கேட்டார் சித்தர். ஆம், சுவாமியே என்றாள் அரசி.
இந்த “நான்”, “எனது” என்ற நினைப்புக்களே அனைத்துத் துன்பங்களிற்கும் ஏக்கங்களிற்கும் தவிப்புக்களிற்கும் காரணம். இதனாற் தான் நடப்பவை நடக்கட்டும் நீ மட்டும் உனது கடமையை செய் என்கிறது பகவத்கீதை. இதைத் தான் கடமையைச் செய் அதையும் எதுவித பலனகளையும் எதிர்பாராது செய் என்கிறார் கிருஸ்னர்.
கிறிஸ்தவரும் தங்கள் அன்றாடக் காரியங்களை தினமும் பிரார்த்திக்கும் போது காலையில் கர்த்தரிடம் ஒப்படைத்து விட்டே செயலாற்றுகின்றனர். இங்கும், நான் என்ற நினைப்பும் எனது என்ற உரிமையும் மழுங்கடிக்கப்படுவதைக் கவனிக்கவும். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இந்த மனோதத்துவம் மனஅழுத்தத்தை குறைத்து விடுகிறதல்லவா. எல்லாச் சமயங்களும் விளைவுகளைக் கடவுளிடம் விட்டு விட்டு காரியங்களை கவனியுங்கள் என்றே கூறுவதையே நானும் உன்னைச் செய்யச் சொன்னேன்.
இதில் “நான்” என்பது நடுவிரல் போல நீளமானது. இந்த நான் என்ற தன் முனைப்பே எல்லாத் துன்பங்களிற்கும் அத்திவாரம். இதற்கு அடுத்த மோதிர விரலே கன்மம் போல இரண்டாவது துன்பக் காரணியாகும். இதையே செய்த வினையிருக்க என்பதன் ஊடாக ஊழ் வினையின் வலியின் பலமாக உணர்த்துகிறார்கள். மூன்றாவதாக உள்ள சின்ன விரல் மாயையைக் குறிக்கும். அது கயிற்றை பாம்பென்றும பாம்பைக் கயிறென்றும் கருதி உண்மையை அறியாது அல்லற்படுகிறது. எஞ்சியுள்ள இரண்டு விரல்களில் கட்டைப் பெருவிரல் தான் கடவுளான பரமாத்மா. சுட்டு விரல் தான் ஜீவாத்மா.
இந்த சுட்டு விரலாகிய நீ கடவுளாகிய கட்டை விரலை நோக்கி வளைந்து கடவுளைத் தொட வேண்டும். அதற்கு முதலில் அந்த முதல் மூன்று விரல்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் நீக்கி விட வேண்டும். இதைத் தான் சைவ சித்தாந்த சாஸ்திரங்களும் உரைக்கின்றன. புத்தரும் தன் கை முத்திரை மூலம் இதையே காட்டுகிறார். இந்த உடலே ‘நான்” என நம்பவதும், இந்த உடலிற்கு தேவையான எதையும் என்னுடையது என்று கருதி நாடுவதும் இல்லாத போது துன்பமில்லாது போய் விடும். நீ எதைக் கொண்டு வந்தாய் இழப்பதற்கு? என்று பகவான் அருச்சுனனிடம் போர்க்களத்தில் உரைத்ததும் இதையே.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது - எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது -எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக அழுகிறாய் - எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு-எதை நீ படைத்தாய் அது வீணாவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ. அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையதாகிறது மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும். இந்த மாற்றம் உலக நியதியாகும்”. நம்மவர்கள் தற்காலத்தில் வெளிநாடுகளில் அச்சிடும் கல்வெட்டுகக்ளில் சேர்த்துக் கொள்ளப்படும் இந்த வசனங்களை சித்தஞானியும் திருப்பி கூறினார்.
அரசியே ! நீயுண்டு நின் கடமைகள் உண்டு என்று எண்ணி உன் வீட்டுப் பணிகளை முதலிற் செய். உன் கணவன், உன் மகள், உன் மகன் போன்றவர்களிற்கான பணிகளைக் கவனி. அடுத்து உற்றார், உறவினர் உன் நாட்டவரிறகு இயலுமானதைச் செய். புலன்களைப் பற்றியோ விளைவகளைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ கடந்த காலம் பற்றியோ சிந்தித்து மன அழுத்தத்தை அதிகரிக்காதே. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது - எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது -எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.
ஆனால் இன்றைய தமிழ்வின் செய்தியோ பௌத்த அற பீடம் யாழப்பாணத்தில் நிறுவப்படுவதாக கூறுகிறது. புத்தர் சிலைகள் நிம்மதிக்கான வழிகளை விளக்குவதற்குப் பதிலாக, மதத் திணிப்பாக சமய அழிப்பாக பாலாவிக் கரையிலும் நிறுவப்பட்டுள்ளது. மகிந்த லங்காவின் புதிய மகாவம்சம் இனி பலாவியின் கரையில் அமர்ந்த ஆதி பகவன் புத்தர் தான் என்றும் எழுதிச் சேர்கக்கவும் கூடும். நந்திக் கடல் மகிந்த கடலாகவும் மாறலாம். இழப்பு மட்டுமல்ல இந்த நிரந்தர அழிப்பே ஈழத் தமிழரின் நிம்மதியின்மைக்கு காரணமாக உள்ளது. ஆக நிம்மதி பற்றிப போதிக்கும் புத்தரின் கை விரல் முத்திரை தமிழர்களின் நிம்மதியைக் கெடுப்பதாகவே உள்ளது.
பூனைக் கண்ணன், புகைக் கண்ணன் ஆகிய அன்னியர் ஆண்டு சிங்களச் செங்கண்ணன் தமிழரை ஆளும் இக்காலம் தன்னைத் தானே தமிழன் வடக்கிலாவது ஆளும் காலம் மலரலாம். உயிரை ஆயுதமாக்கி இலவம் பூக்களாக வெடித்துச் சிதறிய நம் போராளிகளின் கனவு உலக சக்திகள் சிலவற்றின் தேவையாகும் போது, தங்கள் பாதுகாப்பிற்காக நிம்மதிக்காக அந்தப் பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவிக்கப்படலாம்.
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவனுடையதாகிறது மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகும். இந்த மாற்றம் உலக நியதியாகும்”. கார்ல் மார்க்ஸ் என்ற பொருளாதாரச் சிந்தனாவாதி உரைத்ததும் இதையே.
எதுவும் கடந்து போகும். ஆம் மாற்றம் உண்டு என்பதில் மாற்றம் இல்லை. ஆகவே நாம் நிம்மதியடையலாம். ஆனால் அதற்கு நிறையக் காலம் எடுக்கலாம். அதை உரிய ராஜீக வழிகளில் உலகுடன் தொடர்பு கொண்டு பெற சரியானவறறை செய்ய வேண்டியது தமிழராகிய நமது கடமையாகும். போராடாவிட்டாலும் கடமைகளையாவது நாம் செய்வோமாக!
(L.SRI)G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar