இந்தியப் பயணத்துக்குப் பின்னர் மகிந்தவுக்கு வந்த ஞானோதயம்! - அனலை நிதிஸ் ச. குமாரன்

இந்த நூற்றாண்டின் மகா புத்திசாலியென்று தன்னைக் கருதும் மகிந்த தானொரு முட்டாள் என்பதனை மறந்துவிட்டுச் செயற்படும் செயல் கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வருகிறது.
இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகத் தமிழினத்தை அழிக்க ஏவிய மகிந்த அரசு இராஜதந்திர வலையில் சிக்கித் தவிக்கிறது என்பதே யதார்த்தமான நிலை. செய்யும் அனைத்து முட்டாள்த் தனமான வேலைகளையும் செய்துவிட்டு பகிரங்கமாகவே தப்பிக்க எண்ணும் அனைத்துத் திட்டங்களும் தவிடுபொடியாக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கோரப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் கிடப்பிலேயே கிடக்கின்றன. மனித உரிமை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கைகளை இன்றுவரை நிறைவேற்றாமலே இருக்கிறது சிறிலங்கா அரசு. ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் சிறிலங்கா விடயத்தை விவாதிக்கும் நிலை உருவாகும் சாத்தியம் வருகிறது என்று கேள்விப்பட்டதும் சில அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் நிகழ்வுகளைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் செய்கிறது சிங்கள அரசு.
இந்தியாவின் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய கையுடனேயே மகிந்த முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பயணத்தை மேற்கொண்டு சில அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியதன் மூலமாக அவரது முட்டாள்த் தனமான இராஜதந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. செய்வதையெல்லாம் செய்வது பின்னர் உலகநாடுகளைத் திசைதிருப்பும் முகமாக சில தில்லுமுல்லு வேலைகளைச் செய்வது மகிந்தவுக்குக் கைவந்த கலை.
சிங்கள தேசத்தின் விரிவாக்கலுக்கே உலக நாடுகளின் பணம்
தமிழர் பகுதிகளை அபிவிருத்தி செய்யப்போவதாகக் கூறி உலக நாடுகளிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய்;களைப் பெற்றது சிங்கள அரசு. இப் பணம் தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பதில் தமிழினத்தை அழிக்கும் செயற்பாட்டுக்கே செலவிடப்பட்டது. தமிழ் இளைஞர்களைத் தமிழர் பிரதேசங்களிலிருந்து துரத்தியடிக்கும் வேலைகளை மகிந்தவின் சகோதரர்கள் மற்றும் புத்திரர்கள் செய்ய, மகிந்தவின் முக்கிய அமைச்சர்களோ தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் வேலைகலைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு வருகிறார்களோ அதைப்போலவே வடக்கிலும் தமிழர்களைக் குறைக்கும் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது சிங்கள அரசுகள். பல்லாண்டு காலமாக புத்தளம் போன்ற பகுதிகள் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்களாக இருந்த போதிலும், பின்னர் தமிழர்களை இல்லாதொழிக்க சிங்கள அரசுக்குள் பல்வேறு பிரயத்தனங்களைச் செய்து தமிழரின் இருப்பை இல்லாதொழித்தார்கள் என்பது வரலாறு.
தமிழ் மொழி பேசும் சிங்களவர்கள் என்கிற நிலையை இறுதிக்காலத்தில் உருவாக்கியது சிங்களம். பின்னர் புத்தளம் போன்ற பிரதேசங்கள் சிங்களமயமாக்கப்பட்டன என்பதே வரலாறு. இதனை மையமாக வைத்தே கிழக்கு மாகாணத்தில் சில வேலைத்திட்டங்கள் மூலமாகத் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் வேலைகளைச் செய்தது சிங்களம். இதைப் போன்றே தற்போது வடக்கிலும் வெளிப்படையாகவே சில வேலைகளைச் சிங்களம் செய்து வருகிறது.
தமிழர்களை நிரந்தரமாக அவர்களுடைய பூர்வீகக் காணிகளில் குடியமர்த்தும் வேலைகளைச் செய்வதாகக் கூறிவிட்டு சிங்கள மக்களைக் குடியேற்றும் வேலைகளையே செய்கிறது சிங்களம்.
தமிழ் இளைஞர்களை நாட்டைவிட்டு வெளியேறச் செய்துவிட்டு தமிழர் பிரதேசங்களில் தரித்து நிற்கும் சிங்கள இராணுவத்தை ஏவிவிட்டு தமிழ்ப் பெண்களை மணக்கும்படி செய்து அவர்கள் மூலமாக தமிழ்த் தாய்க்கும் சிங்கள அப்பனுக்கும் பிறந்த குழந்தை என்கிற முத்திரையைக் குத்தும் வேலைகளையே செய்கிறது சிங்களம்.
கத்தோலிக்க மதத்தைப் பரப்ப ரோம இராஜ்ஜியம் படைகளை ஏவிவிட்டு மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்று கணவன் மற்றும் தாய் தந்தையருக்கு முன்னாலேயே பெண்களைக் கற்பழித்து அவர்கள் மூலமாகப் பிறந்த பிள்ளைகள் அனைவரும் கத்தோலிக்கர்கள் என்கிற காட்டுமிராண்டித்தனமான வேலைகளைச் செய்ததன் காரணமாக இன்று இம் மதம் பரவலாக அனைத்து மேற்கு ஐரோப்பாவிலும் பேணப்படுகிறது.
எப்படி அன்று ரோமர்கள் காட்டுமிராண்டித்தனமான வேலைகளைச் செய்தார்களோ அதனையே இன்று சிங்கள அரசு இந்த நாகரிக உலகில் குறிப்பாக புத்தரை வழிபடும் சிங்களவர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கும் போது நிச்சயம் இது மனித குலம் கனவிலும் நினைக்கவே கூச்சப்படும் செயல். இதுபோன்ற செயற்பாடுகள் மூலமாக உலக நாடுகள் தமிழர்களின் புனர்வாழ்வுக்காக வழங்கிய பணத்தைச் சிங்கள மயமாக்கலுக்கு மகிந்த அரசு செலவு செய்கிறது என்பதே உண்மை.
தெற்கின் வசந்தம் வடக்கிலும் மலருமாம்
முள்ளிவாய்க்கால் பகுதி நாட்டின் முன்னேற்றமான ஒரு பிரதேசமாகக் கட்டியெழுப்பப்படும் என மகிந்த தெரிவித்தார்.வடக்கின் இறுதி மீள்குடியேற்றத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பலசேனா மூலஸ்தானவில் நடைபெற்றது. அங்கு அவர் பேசுகையில் தெற்கு மக்கள் அனுபவிக்கும் சகல வரப்பிரசாதங்களும் வடக்கு மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தியா சென்று நாடு திரும்பிய சில நாட்களில் அதாவது செப்டம்பர் 25-ஆம் நாளன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார் மகிந்த. அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா,ரிசாட் பதியுதீன், பசில் ராஜபக்ச, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்குத் தேவையான அபிவிருத்தி வேலைகளைச் செய்வதே இந்த அரசாங்கத்தின் கடமையாக இருக்கிறது என்று கூறினார் மகிந்த.
மகிந்த அங்கு பேசுகையில்:“முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுக் கஷ்டப்பட்ட மக்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சிலருக்கு வீடுகள் கிடைத்துள்ள போதிலும், மேலும் சிலருக்கு வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன். 30 வருட யுத்தத்தில் இப்பகுதி மக்களாகிய நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் துயரங்களையும் கஷ்டங்களையும் நான் அறிவேன்.கடந்த யுத்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டம் இனி ஒருபோதும் இருக்க மாட்டாது. இன, மத,பேதமின்றி அனைத்து மக்களும் ஒரே தாய் பிள்ளைகள்போல் வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்கியுள்ளோம்."
அவர் மேலும் கூறுகையில்,“இன்று மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள இந்தப் பிரதேசம் நாட்டின் முன்னேற்றமான பிரதேசமாக மீளக்கட்டியெழுப்பப்படும். உங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் விவசாய உபகரணங்கள், கைத்தொழில்களுக்கான உபகரணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் வேலைவாய்ப்புகளையும் நாம் உருவாக்கிக்கொடுப்போம்.அதேவேளை, உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்போம். தெற்கு மக்கள் அனுபவிக்கின்ற சகலதையும் உங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம்.”
“வடக்கு, கிழக்கு என்ற பேதம் எமக்குக் கிடையாது. அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வடக்கு மக்கள் இனி பயம், சந்தேகமின்றி நிம்மதியாக வாழ முடியும்இ”இவ்வாறு தெரிவித்தார் மகிந்த.
வேடிக்கை என்னவெனில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மகிந்த பயணங்களை மேற்கொண்டிருந்த வேளையில் மட்டும் ஒரு மாணவியை கொக்குவில் பகுதியில் வைத்து யாரோ கடத்திக் கொண்டுபோய் விட்டதாகப் புகார் கூறப்பட்டது. அது மட்டுமன்றி, பல்வேறு விதமான முறைப்பாடுகள் யாழ் காவல்துறை அலுவலகங்களில் பதியப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தையுமே மகிந்தவின் படைவீரர்களும், அவர்களுக்குத் துணையாகச் செயற்படும் ஒட்டுக்குழுக்களுமே செய்கின்றன என்பது தெட்டத் தெளிவாக அனைவரும் அறிந்த உண்மை. இவைகள்தான் மகிந்தவின் வடக்கின் வசந்தம் போலும்.
வடக்கு கிழக்கு மக்கள் வாழும் பகுதிகளில் அடிக்குஅடி தென்படும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் தமது துணைவிமாரையும்,உறவினர்களையும் சிங்களப் பகுதிகளில் விட்டுட்டு தமிழர் பகுதிகளில் தமிழச்சிகளைக் கேவலப்படுத்தும் இழிசெயல்களின் தலைவராக இருக்கும் மகிந்த தனது முட்டாள்த் தனமான செயற்பாடுகளினாலும்,பேச்சுக்களினாலும் அனைவரையும் தொடர்ந்தும் முட்டாள்களாக்க முடியும் என்று நினைப்பதே அவருடைய அறிவீன்மையைப் புலப்படுத்துகிறது.
சிங்களப் பகுதிகள் ஒன்றும் மகிந்த கூறும் வசந்தத்தை அனுபவிக்கவில்லை என்பதனை மகிந்த உணர வேண்டும். இவர் போன்ற அரசியல்வாதிகளின் அறிவீன்மையான செயற்பாடுகளினால் தெற்கில் வாழும் அப்பாவிச் சிங்கள மக்களே பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளார்கள்.
சிங்கள மக்கள் எப்போது தெருவுக்கு வந்து மகிந்த போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராகப் போராட வருகிறார்களோ அதுவரை மகிந்த போன்றவர்கள் தொடர்ந்தும் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதுவரை வடக்கும் மலராது, தெற்கும் செழிக்காது. அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளும் மட்டுமே வளம்பெறுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com
()G.JKMEDIAWORKS SPECIAL NEWS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar