விமானத்தை வன்னியில் தரையிறக்க முயற்சித்தாராம் கே.பி.!- அனலை நிதிஸ் ச. குமாரன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டதாகப் புதுக்கதை விட்டுள்ளார் கேபி.
இவர் கூறுபவற்றை மறுக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையின் இப்போதைய நிலை இல்லாமையினால் தான் நினைத்ததை எல்லாம் கூறலாம் என்கிற காரணத்தினால் நம்ப முடியாத கருத்துக்களைக் கூறி தமிழீழ விடுதலையின் மகிமையைக் குறைக்கும் செயலில் டுபட்டிருக்கிறார் கே.பி.
நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் தான் புலம்பெயர் இடத்திலிருந்து கடினமாகப் பணியாற்றி எப்படியாவது விடுதலைப் புலித் தலைமையைக் காப்பாற்றி விடலாம் என்று முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி.
கருணா, கே.பி., பிள்ளையான் போன்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து செயற்பட்டது மகிந்த அரசு.
இதற்கு இந்தியா உட்படப் பல நாடுகள் உறுதுணையாக இருந்தன என்பதே உண்மை நிலைவரம். இது இப்படியிருக்க,கே.பியின் தற்போதைய பேச்சுக்கள் வேடிக்கையாக இருக்கிறது.
இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கிவந்த கே.பி. ஏதோ இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் தான் மனமுடைந்து, உடல் நலிவுற்று படுத்த படுக்கையில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
இறுதி யுத்தம் மும்மரமாக இருந்த வேளையில்தான் கே.பி. பல்வேறு விதமான கருத்துப் பரிமாறல்களைப் பல உலக ஊடகங்களுக்கு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் பத்திரமாக உயிருடன் இருப்பதாகத் தகவலை வெளியிட்டார். பின்னர் அடுத்த கணமே போர் முடிவுற்ற விட்டதாகவும் பிரபாகரன் இறந்து விட்டதாகவும் கூறினார். தானே விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்கிற பாணியில் செய்திகள் வெளிவர ஊக்குவித்ததுடன், நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதாகவும் அறிவித்தார்.
மனநிலை சரியில்லாமல் இருந்த ஒருவரினால் எப்படி மேற்கூறப்பட்டவற்றைத் தெரிவித்திருக்க முடியும் என்கிற கேள்வி எம்மில் பலரிடத்தில் எழுகிறது. மேற்கூறப்பட்ட சிந்தனைகள் அனைத்தும் மதிநுட்பம் உடையோரினாலேயே தெரிவிக்க முடியும். ஆக யாரோ பிறருடைய ஆலோசனையின்படிதான் கே.பி. செயலாற்றி இருந்துள்ளார் என்பதனை நேரடியாகவே ஒப்புக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளை அழிப்பதன் மூலமாக விடுதலைப் பயணத்தை அடக்கி விடலாம் என்றே கங்கணம் கட்டிச் செயலாற்றியது சிங்களம். இதற்குத் துணைபோனவை இந்தியா உட்படப் பல்வேறு நாடுகள் என்பது கே.பியின் பேட்டியின் மூலமாக உறுதியாகியுள்ளது.
நம்பவே முடியாத கருத்துக்கள்
பிரபாகரனின் மூத்த மகனின் வேண்டுதலின் பேரில்தான் ஒரு சிறிய விமானத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி. இந்த விமானத்தை வாடகைக்கு அமர்த்த 35 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்டதாகவும், இந்தப் பணத்தை வழங்கும்படி நெடியவனிடம் தெரிவித்ததாகவும், நெடியவனோ குறித்த பணத்தைத் தர மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார் கே.பி. உண்மை ஒரு நாள் வெளிவரும், அப்போது தெரியும் யார் சொல்வது உண்மையென்று.
பல இலட்சம் செலவில் வாடகைக்கு எடுக்க இருந்த விமானத்தை வன்னிக்கு அனுப்பி பிரபாகரனின் குடும்பத்தை வெளியேற்றும் செயலை மேற்கொள்ள குறித்த விமானம் தரை இறங்க விமான ஓடு தளம் வேண்டும். ஆனால், சிங்கள அரசோ தனது விமானப் படையினர் விடுதலைப் புலிகள் அமைத்திருந்த விமான ஓடுதளத்தை அழித்து விட்டதாக முன்னரே கூறிவிட்டது. அப்படியாயின், கே.பி. அனுப்பும் விமானம் எங்கே போய்த் தரை இறங்கியிருக்க முடியும் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஒரு வேளை மறைமுகமான ஏதாவது ஒரு ஓடுபாதையை விடுதலைப் புலிகள் வைத்திருந்தாலும், குறித்த விமானம் சிறிலங்காவின் வான் பரப்புக்குள் நுழைந்ததும் சிறிலங்காவின் விமானப் படையினர் என்ன உறங்கிக் கொண்டா இருந்திருப்பார்கள் என்கிற வினாவும் எழுகிறது. எதிரியானவன் எப்போதும் உசாராக இருந்தே தனது கள முனைப் போரை நடத்த முடியும்.
சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்தே மும்முனைப் போரைப் பல நாடுகளின் துணையுடன் நடத்தியது என்பது உலகறிந்த உண்மை. அப்படியிருக்க, கே.பி. கூறும் தகவல்கள் பொய் என்பது தெரிகிறது.
இதிலிருந்து இறுதி யுத்தம் இடம்பெறுவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே எதிரியின் பிடிக்குள் கே.பி. சிக்கிவிட்டார் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு உண்மையை மறைக்கப் போய் ஆயிரம் பொய் சொல்லும் நிலைக்குள் கே.பி. தள்ளப்பட்டுள்ளார் என்கிற பரிதாபமான நிலையையே கே.பியின் பேட்டியின் மூலமாக உணரக் கூடியதாக உள்ளது.
நோர்வே அரசினால் சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்ம் சமீபத்தில் பி.பி.சிக்கு பேட்டியளிக்கையில்,
தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிப்பது. அதன் பின்னர் ஐ.நா. அதிகாரிகள், பிரதிநிதிகள் (இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே) மற்றும் இந்தியப் பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் வடபகுதிக்கு கப்பலில் செல்வது. யுத்த முனையில் இருக்கும் புலிகள் மற்றும் பொதுமக்களுடன் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்வது. அதன் பின்னர் இலங்கையின் பாதுகாப்பில் அனைவரையும் முகாம்களுக்கு அனுப்புவது” என்பதுதான் திட்டமாக இருந்ததாகக் கூறினார். இவைகள் அனைத்தும் உண்மையே என்று கூறியுள்ளார் கே.பி.
நடக்காத ஒன்றுக்காக வாதாடுவது ஏன்?
எரிக் சொல்ஹெய்மின் திட்டத்தை விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு போதும் ஏற்க மாட்டார் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ள கே.பி. இராணுவ பலத்தின் மூலமாகவே தமிழீழ தேசத்தை அடையலாம் என்றும் கூறியுள்ளார். அப்படியிருக்க,புகைப் படங்கள் எடுத்த பின்னர் சிறிலங்கா அரசின் முகாம்களுக்குள் முடக்கிவைக்க விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு போதும் சம்மதிக்காது என்பதை கே.பியே ஒத்துக்கொள்கிறார்.
கழுத்துகளில் சயனைட் குப்பிகளைச் சுமக்கும் புலிப் படையினரை அடமானம் வைக்க விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு போதும் சம்மதிக்காது என்பதனை நன்கே அறிந்து வைத்திருந்தார் கேபி. ஆக விடுதலைப் புலிகளின் தலைமை சம்மதிக்க இயலாத காரியத்தைச் செய்யும்படி வற்புறுத்துவது என்பது வேடிக்கையாக உள்ளது.
பிரபாகரனோ அல்லது வேறெந்த விடுதலைப் புலிப் போராளிகளோ பிற நாடுகளின் கண்காணிப்பில் வாழச் சம்மதிக்க மாட்டார்கள் என்பதனை நன்கே அறிந்து வைத்திருந்தார் கே.பி. ஆனால், நோர்வேயின் திட்டத்தை கே.பியே சரியென்று கூறுவதன் பின்புலம் என்னவென்பதை மீண்டும் மீண்டும் இங்கே எழுத வேண்டிய அவசியமில்லை.
தமிழீழ விடுதலைப் பயணம் ஆயுத வழியில் செல்ல ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே எவருடைய கட்டுப்பாடுகளும் இன்றி தமிழகத்தில் செயலாற்றிய போராளிகளா இமாலய இராணுவச் சாதனைகளைப் புரிந்த பின்னரும் மற்றவர்களின் கண்காணிப்பில் வாழும் நிலையை ஏற்பார்கள் என்கிற கேள்வியே அனைவர் மனங்களிலும் எழுகிறது.
நோர்வே சமர்ப்பித்த திட்டங்களை விடுதலைப் புலிகளின் தலைமைக்கு தான் கூறியதாகவும் அதனை விடுதலைப் புலிகளின் தலைவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறிய கே.பி., வேறொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் நோர்வே தெரிவித்த திட்டம் என்னவென்று பிரபாகரனுக்குத் தெரியாது என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.
இது குறித்து கே.பி. மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளின் தளபதிகள் நோர்வேயின் திட்டம் குறித்து பிரபாகரனிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் பிரபாகரன் நெறிமுறை பிறழாதவர். இத்திட்டத்திற்கு அவர் உடன்படமாட்டார் என்பதற்காக அவரிடம் இதுபற்றித் தெரிவிக்கவில்லை"என்று கூறியுள்ளார் கேபி.
விடுதலைப் புலிகளின் தளபதிகள் நிச்சயமாக எதனையும் பிரபாகரனிடத்தில் இருந்து மறைத்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இதிலிருந்து கே.பியின் வண்டவாளம் என்னவென்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.
இன்னொரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் கே.பி. கூறுகையில், “எனக்குப் புரிந்துவிட்டது பிரபாகரன் எதற்கும் ஒத்துக்கொள்ளமாட்டார் என.
எனவே நான் எரிக் சொல்ஹெய்ம்க்கு அறிவித்துவிட்டு ஒஸ்லோ பயணத்தையும் நிராகரித்துவிட்டேன். இது 2009 ஏப்ரல் கடைசிப் பகுதியில் நடந்தது." இத் தகவலை யார் சொன்னது என்று டி.பி.எஸ் ஜெயராஜ் கேட்கும்போது, “சாதாரண ஊடகங்களினூடாக அறிந்தேன்" என்று பதில் அளித்துள்ளார் கே.பி.
விடுதலைப் புலிகளின் தலைமையுடன் தொடர்பில் இறுதிக் காலத்தில் இருந்ததாக கூறும் கே.பி., வெறும் சாதாரண ஊடகங்களில் வெளிவந்த தகல்களின் ஊடாகத் தான் அறிந்ததாக எவ்வித பொறுப்பின்றிக் கூறியுள்ளார்.
தான் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக பிரபாகரனினால் நியமிக்கப்பட்டதாகக் கூறும் கே.பி.,வெறும் சாதாரண ஊடகங்கள் மூலமாக இயக்கத்தின் தகவல்களைப் பெற்றார் என்று கூறும் போது வெட்கப்படும் செயலாக உள்ளது.
பொய்யையும் பொருந்தச் சொல்லவேண்டும் என்பது பழமொழி. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பொய்யை அல்லவா கே.பி. சொல்கிறார்.
எதிரியானவன் மும்முனைப் போரை முடுக்கி விட்டிருந்த வேளையில் ஏதோ தான் ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி பிரபாகரனின் குடும்பத்தைக் காப்பாற்ற முனைந்ததாகவும், நெடியவனே இத்திட்டத்தைச் செயலாற்ற முடியாமல் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார் கே.பி.
இவர் போன்றவர்கள் கூறும் பொய்களைக் கேட்க பத்துப் பேர் இருந்தால் நிச்சயம் இவர்கள் இன்னும் பல பொய்களைக் கூறி குழம்பிய தண்ணிக்குள் மீன்பிடிக்கும் வேலையைச் செய்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் இவை போன்ற பொய்யான கட்டுக் கதைகளை நம்பி ஏமாறாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
(நன்றி-L.SRI) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar