ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக?


« ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? » என்னும் தலைப்பில் வெளியாகும் இத்தொடர் கட்டுரையின் முதல் பகுதி இது. இதனை குணா. கவியழகன்* எழுதுகின்றார்.

எதற்காக எழுதுகிறேன்?

மனித நேயத்தில் மையங்கொண்டே உலக அரசியல் நியமங்கள் இயங்குவதாக நம்பப்படும் இந்த நாகரீக உலகில் தம் இன அடையாளத்திற்காக ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆளாகினர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் எனும் பெயரால் மனிதப் பேரழிவைக் கணக்கிலெடுக்காது இறுதி யுத்தத்தை கொடுரமாக நடத்தி முடித்தது சிறிலங்கா அரசு.

சிறிலங்காவில் தேசிய இனப்பிரச்சினையை ஒப்புக் கொண்டு அனைத்துலகத் தலையீட்டோடு தீர்வு காணும் முயற்சி நடந்த பின்னரும் ஈழத்தமிழ் மக்களின் தலைமைத்துவமாகப் பேச்சில் ஈடுபட்ட 'தமிழீழ விடுதலைப் புலிகள்' மீது பயங்கரவாத முத்திரை குத்தி யுத்தம் தொடுக்கப்பட்டது. சமாதான முயற்சிக்கு கடமையாற்றிய கண்காணிப்புக்குழுவை - மூன்றாந்தரப்பை ஒருதலைப் பட்சமாய் வெளியேற்றிவிட்டு யுத்தத்தை சிறிலங்கா அரசால் தொடுக்க முடிந்தது.

ஈழத்தமிழ் மக்களின் போராட்ட சக்தியை அழிப்பதற்காக நாற்பதாயிரத்திற்கு அதிகமான மக்கள் பலியாவது பற்றியோ, ஒரு இலட்சம் வரையானவர்கள் காயமுறுவது பற்றியோ எந்த ஆட்சேனையும் இன்றியே இறுதி யுத்தம் நிகழ்த்தப்பட்டது. ஒரு வகையில் ஈழத்தமிழ்மக்களின் போராட்ட முனைப்பை வேரோடு பிடுங்க மனிதப்பேரழிவு கொண்ட இந்த ‘இனப்படுகொலை’ திட்டமிடப்பட்ட தேவையாகவும் இருந்தது எனலாம்.

உலகில் தடைசெய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களைப் பிரயோகித்தும், யுத்த தர்மங்களை மீறியும் போர் குரூரமாக நிகழ்த்தப்பட்டது. இருந்தும் அதை தடுக்கும் வல்லமை இந்த உலக சக்திகளிடம் இருக்கவில்லை. அல்லது தடுப்பதற்கான உளவூக்கம் இந்த உலக மனச்சாட்சியிடம் இருக்கவில்லை.

மனித உரிமையின் மகத்துவத்தின் பேரால் உலக அரசியல் நியமங்கள் சுழல்வதாக காட்டப்படும் காட்சியின் மாயவிம்பத்தை மீண்டும் ஒருமுறை கிழித்திருக்கிறது முள்ளிவாய்க்கால் பிணவயல்.

ஒரு சிறிய அரசு தன் மக்களின் மீது புரிந்த கொலைவெறித் தாண்டவத்தை விஞ்ஞானம் தந்த செய்மதிக் கண்களால் அனைத்து உலகமும் பார்த்திருந்த போதும் அவற்றின் மனச்சாட்சியை அது உலுக்கவில்லை. சர்வசக்தி கொண்ட உலக நாடுகளால் இச்சிறிய அரசின் கொலைவெறியை தடுத்து மக்களைக் காக்க முடியவில்லை. உடன்பாட்டு மீறலை கட்டுப்படுத்த இயலவில்லை எனின் இந்த உலக அரசியல் சுற்றும் அச்சாணியே வேறு.

புனித யுத்தம் எனும் பெயரால் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது நடத்தப்பட்ட குருட்டுத் தாக்குதல் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போரை’ பிரகடனம் செய்ய வைத்தது. அது செல்லுபடியான உலக உலக அரசியலாகவும் மாறிற்று.

இதைவிடவும் குரூரமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக அல்லது அரச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை இந்த உலகு பிரகடனம் செய்யுமா? அப்படி ஒரு உலகஅரசியலை முன்னெடுக்குமா?

இந்தப் படிப்பினை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமானதல்ல. ஒடுக்கப்படும் இனங்களுக்கான உலகளாவிய படிப்பினை. முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் ஈழத்தில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கற்றுக்கொண்ட பாடங்கள் அனுபவத்திலிருந்து தேசிய போராட்டத்திற்கு புதிய செல்நெறிகளைக் கண்டு பிடிக்க வேண்டியது மனித உரிமைக்கான உலக அறிவியலின் கடமையும் கூட.

மேலான ஆயுத பலமோ, அர்ப்பணிப்பும் துணிச்சலும் கொண்ட நுண்மையான போராற்றலோ, அனைத்துலக நீதி நியமங்களோ அரச பயங்கரவாதத்திடம் இருந்து ஒடுக்கப்படும் மக்களைக் காத்துவிடாது என்பது கற்றுக் கொண்ட பாடம் அனுபவத்திலிருந்து புரியப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிலிருந்து ஈழத்தின் ஆயுதப்போராட்டத்தை அதன் பயணவழியை மறுவாசிப்புச் செய்யவே இந்த கட்டுரைகளின் மூலம் முயற்சிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு பிற சக்திகளால் இழைக்கப்பட்ட அநீதி பற்றி இங்கு எடுத்தாளப்படவில்லை. அவை அவையாகவே இருக்கின்றன. இந்த நியதியான அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள நிகழ்த்திய போராட்டத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய தீர்மானத் தவறுகளையே இங்கு கருப்பொருளாக்கியுள்ளேன்.

பயண வழியில் நிகழ்ந்த தவறை மறுவாசிப்பு செய்யும் நேர்மையின் மூலம் புதிய செல்நெறியை கண்டுபிடிக்கும் இயலுமையை வழங்குவதே இதன் உள்நோக்கம். மாறாக குற்றம் கண்டு இது அரசியல் தலைமைத்துவப் போட்டிக்கு உபயோகப்படுத்துவதற்கான ஆயுதம் அல்ல. இழைக்கப்பட்ட துரோகத்தனங்கள் ஒழிந்து கொள்வதற்கானதும் அல்ல. மக்களின் குருதிதோய்ந்த இந்தப் போராட்டத்தின் அனுபவத்தை மீதிப் பயணத்தின் பாதையை வகுத்துக் கொள்வதற்காகவன்றி சுயநல அரசியலுக்கு உபயோகப்படுத்தினால் அதுவே மன்னிக்க முடியாத அரசியல் அயோக்கியத்தனமும் ஆகும்.

இந்த வாசிப்பும் கூட ஒரு பார்வையே இதுவே முடிவான கருத்தாக வற்புறுத்தக் கூடியதல்ல. இது ஒரு தர்க்க வெளியை உருவாக்கும் நேர்மையுடனேயே எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறான ஓர் ஆரோக்கிய வெளி உருவாகினால் அதுவே முதல் வெற்றி. அதில் வலிதான தர்க்கம் புதிய அரசியல் செல்நெறியை கண்டு பிடித்துத் தரும் என்பதே இந்த எழுத்தின் நம்பிக்கை.

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மறுவாசிப்புச் செய்யும் இந்தப் பார்வை குறித்துப் பெருமை எதுவும் இல்லை ஆட்சேபனையும் எனக்கில்லை. இதை ஆய்வாகமட்டுமல்ல சாட்சியாகவும் கூட ஒப்புவித்திருக்கிறேன் உங்களின் முன் பயணவழியில் இன்றைய என் காலக்கடன் இதுவென.

- குணா. கவியழகன்*

*இக்கட்டுரையாளர் ஓர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த ‘North east monthly’ ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார். (நன்றி-குணா. கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar