மலேசியாவிலிருந்து திரும்பியதும் இங்கே பயன்படுத்தும் சிம் கார்டை மொபைலில் திணித்தேன். முதல் ஆளாக அப்புசாமிதான் லைனில் வந்தார். 'சுவாமி என்ன சொல்லியிருக்கான்னு தெரியுமா' என்று கேட்டார். 'அவன் இவன் என்றெல்லாம் மரியாதை இல்லாமப் பேசாதீங்க அப்புசாமி' என்றதும் டென்ஷனாகி விட்டார். 'அவன் அப்படித்தான் எல்லாரையும் பேசுறான்' என்றார் கோபத்துடன்! இத்தனைக்கும் குப்புசாமி மாதிரியே இவரும் அதிகம் கோபப்படாதவர்.
அதற்குப் பிறகும் அது எந்த சுவாமி என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா என்ன? விஷயம் என்ன - என்பதை மட்டும் கேட்டேன். 'ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கணுமாம்' என்றார் அப்புசாமி. சுவாமியின் அந்த உளறலைக் கண்டித்து எழுதியே ஆகவேண்டும் என்பது அவரது கோரிக்கை. அந்தக் கோரிக்கையை நிராகரிக்கிறேன் - என்பதை நண்பர் அப்புசாமிக்கு இதன் வாயிலாகத் தெரிவிக்கிறேன். அரசியல் கோமாளிகள் பற்றி எழுதவே கூடாது என்று நினைப்பவனில்லை நான். நா.சா. பற்றி எழுதாமலா இருக்கிறேன்!
அரசியல் கோமாளிகள் பற்றி எழுதலாம்தான். ஆனால் அரசியல் அனாதைகள் பற்றி எழுதுவது வெட்டிவேலை. செத்த பாம்பை அடித்து என்ன சாதிக்கப் போகிறோம் நாம்? தடை செய்யப்பட்டிருந்த 'காற்றுக்கென்ன வேலி' படத்திலேயே, ஒரு கதாபாத்திரத்தின் பெயரை - சுவாமி - என்று மொட்டையாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பெயர் வரும்போதெல்லாம் திரையரங்கில் சிரிப்பலை எழும். மறுதணிக்கைக் குழுவில் படம் பார்த்த ஒரு சகோதரி, 'அது அந்த சுவாமி தானே' என்றார். 'இல்லை' என்று நான் மறுத்தபோது, "நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அது நிச்சயமாக அந்த சுவாமிதான். வேறு எந்த சுவாமி இப்படியெல்லாம் முட்டாள்தனமாகப் பேசுவான்" என்று என்னை மடக்கினார். "இப்படிப்பட்ட அரசியல் அனாமதேயங்களுக்கு எதற்கு அடையாளம் - என்று நினைத்து முகத்தைக்கூட காட்டாமல் விட்டுவிட்டீர்களா" என்று அவர் கேட்டபோது, அதுதான் உண்மையோ என்று, அந்தக் கதாபாத்திரத்தைப் படைத்த எனக்கே தோன்றியது.
அனாதரவாக நிற்பவர்களுக்கு அடைக்கலம் தருவதும் அவர்களை அரவணைப்பதும் நிச்சயமாக மனித நேயக் கடமைகள் தான். அதை நான் மறுக்கவில்லை. அதேசமயம், தாயையும் தந்தையையும் கத்தியால் குத்திக்கொன்ற கத்திக்குத்து கந்தசுவாமி, "நான் அம்மா அப்பா இல்லாத அனாதை ஐயா! என் மீது இரக்கம் காட்டி எனக்கு அனாதரத்னா பட்டம் கொடுங்கள்" என்று நீதிபதியிடம் கோரிக்கை வைப்பதைக் கேட்டுக் கைதட்டிக் கொண்டிருக்கமுடியுமா?
அது எந்த சுவாமியாக வேண்டுமானாலும் இருந்து தொலைக்கட்டும்! அவர்களைப் பற்றி நாம் எதற்காகக் கவலைப்படவேண்டும்? அந்தப் பூனையை மடியில் கட்டிக்கொண்டுதான் நார்த் பிளாக் போக சகுனம் பார்ப்போம் என்று திருச்சிற்றம்பலநாதர் மாதிரி ஒற்றைக்காலில் நிற்கிறார்களே, அவர்களைப் பார்த்துத்தான் கவலைப்படவேண்டும். குறைந்த பட்சம் அவர்களுக்கு அனுதாபமாவது தெரிவித்தாகவேண்டும்... வேறென்ன செய்ய முடியும்! அத்வானியின் ரதமாயிருந்தால் இப்படித் தெருவில் போகிறவன் வருகிறவன் எல்லாம் சவாரி செய்ய முடியுமா?
ஈழத்தில் நடந்த இனப்படுகொலை பற்றி உண்மையான உணர்வோடு பேசிக் கொண்டிருக்கும் யஷ்வந்த் சின்ஹாவை வைத்து தமிழ்நாட்டில் நாலு ஓட்டு வாங்கலாம் என்று தமிழிசை நினைத்தால் அதை நாசமாக்கிவிட்டுத்தான் சுவாமிகள் ஓய்வார்கள் போலிருக்கிறது. உங்கள் கட்சியில் இணைந்திருக்கும் சுவாமியின் மாபெரும் மக்கள் இயக்கத்தில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு ராஜபக்சேவுக்கு பாரத்ரத்னா விருதைக் கொடுத்தே ஆகவேண்டும் - என்று தமிழ்நாட்டில் நான்கு இடத்தில் சுவாமியை வைத்துக் கூட்டம் நடத்திவிடப் போகிறார்கள் சகோதரி! எச்சரிக்கையாயிருங்கள்! இதற்கு, "பாரதீய ஜனதா அரசு மட்டும் அமைந்துவிட்டால், முதல் வேலையே ராஜபக்சேவுக்கு பாரத்ரத்னா கொடுப்பதுதான்" - என்று அறிவித்துவிட்டு, தி.நகரில் இருக்கும் கமலாலயத்துக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டிவிட்டு, நீங்கள் பாட்டுக்கு மருத்துவத் தொழிலைத் தொடரலாம்......... என்ன செய்வதாக உத்தேசம் சகோதரி!
இப்படியாக, ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை பாரதீய ஜனதாவில் இணைத்து மறு அவதாரம் எடுத்திருக்கும் சுவாமிஜியின் குதூகலக் கூத்து ஒருபுறம் ஆரம்பித்திருக்கிறது. இன்னொருபுறம் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் கருப்பணசாமியாக அவதாரம் எடுத்திருக்கும் லக்ஷ்யபுத்திரர்களான மனுஷ்யபுத்திரர்களின் அதகளம். ஈழப்போராட்ட வரலாற்றை முழுக்க முழுக்க திரித்துக் காட்டும் 'மதராஸ் கபே' திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்தால் - அதை எதிர்த்து மாபெரும் கருத்துச் சுதந்திரப் போரை அவர் நடத்துவார் என்பது, ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள அவரது பேட்டியிலிருந்து தெரியவருகிறது.
ஆட்சேபகரமான காட்சிகளை வேண்டுமானால் நீக்கக் கோரலாம் - என்பது மனுஷ்யபுத்திரனின் வாதம். "படத்தையே தடைசெய்யக் கோருவது ஆபத்தானது. ஊடகங்கள் மூலம் வெளிப்படையான அரசியல் விமர்சனங்கள் எழுவதற்கு அது இடையூறாகிவிடும்" என்பது அவரது கட்சி. கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. என்றாலும், அவரைப் போல் உருவெடுத்துள்ள திடீர் கருத்துச் சுதந்திரக் காப்பாளர்களிடம் கேட்பதற்கு என்னிடம் தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி இருக்கிறது. 'காற்றுக்கென்ன வேலி' படத்தை வெளியிட அனுமதிக்கவே முடியாது என்று தணிக்கை வாரியம் ஒற்றைக்காலில் நின்றதே... அப்போது இந்த க.சு.காப்பாளர்கள், காளிந்தி நதிக்கரையில் கால்நடை மேய்க்கப் போயிருந்தார்களா?
2000 ஜூனில் சான்றிதழ் மறுக்கப்பட்ட காற்றுக்கென்னவேலிக்காக 2001 அக்டோபர் வரை நீதிமன்றத்தில் மட்டுமில்லாமல் மக்கள் மன்றத்திலும் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் போராடினோமே....... அப்போது எங்கே போயிருந்தார்கள் இவர்கள். ஒருவேளை, அப்போது க.சு.காப்பாளர் அவதாரத்தை இவர்கள் எடுக்கவேயில்லையா?
பிரபாகரன் மீதும், விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் மீதும் புழுதி வாரித் தூற்ற முயலும் ஒரு படத்தை இப்போது அனுமதிக்கிறது தணிக்கை வாரியம். மனித நேயத்தை மட்டுமே மையமாகக் கொண்ட காற்றுக்கென்ன வேலியை 10 ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கவே மறுத்தது. அப்போது வேறு விதிமுறைகளும், இப்போது வேறு விதிமுறைகளையுமா வைத்திருக்கிறார்கள் அவர்கள்! அது ஒருபுறம் இருக்க, இப்போது குரல் கொடுக்கும் இவர்கள், அப்போது நீண்ட நெடிய மௌனவிரதத்தில் மூழ்கியிருந்தார்களே, ஏன்? சம்பந்தப்பட்டவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்.
காற்றுக்கென்ன வேலி - மனித நேயத்தை மையமாகக் கொண்ட திரைப்படம் என்பதை நான் சொல்லவில்லை. என் படத்தைப் பற்றிய நீதிமன்றத்தின் கருத்து அது. போரில் காயமடைந்துவரும் பெண் போராளி மணிமேகலைக்கு தமிழக மருத்துவர் சுபாஷ் சந்திர போஸ் மனிதநேயத்துடன் சிகிச்சையளிப்பதை வைத்து பின்னப்பட்ட ஒரு கதையை அப்படித்தான் குறிப்பிடமுடியும். அந்தப் படத்துக்கு, 'புலிகளை ஆதரிக்கும் திரைப்படம்' என்று முத்திரை குத்த முயன்றபோது இந்த மனித நேய மகானுபாவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? புகழேந்தி என்கிற எளிய கலைஞனுக்காக அவர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டாமா? கேரளத்தைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம் என்பவருக்காகத் தன்னிச்சையாகத் திறக்கும் இவர்களது உதடுகள், புகழேந்தி என்றால் மட்டும் பூட்டுப் போட்டுக் கொள்ளுமென்றால், கருத்துச் சுதந்திரம் பற்றிக் கதைப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது இவர்களுக்கு!
கதாநாயகிக்கு எப்படி மணிமேகலை என்று பெயர் வைக்கலாம் - என்று தணிக்கை வாரியம் கேட்டதை எதிர்த்து பத்திரிகைகள் பேசியபோது, இவர்கள் ஏன் பேசவில்லை என்கிற ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன். மணிமேகலை என்று பெயர் வைத்தது என்ன தவறு - என்று நீதிமன்றம் கேட்டதே... அதைக்கூட இவர்கள் கேட்க முயலவில்லையே, ஏன்?
'மதராஸ் கபே' திரைப்படத்தைப் பார்த்த லயோலா கல்லூரியின் பிரிட்டோவும் செம்பியனும் ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தனர். ஆகப்பெரிய தலைவர் ஒருவரைக் கொல்வதற்கான வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தருபவர், ஒரு ஜெர்மன் தமிழர் என்று காட்டியிருக்கிறார்களாம் அந்தத் திரைப்படத்தில்! வேலூர் சிறைக்குள் ஒரு முழுமையான மனிதனாக வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் பேரறிவாளனை - அந்தச் சிறையையே அறிவுக்கூடமாக மாற்றியிருக்கும் அந்தப் பகுத்தறிவாளனை விடுதலை செய்துவிட்டு, பேட்டரி வாங்கிக் கொடுத்த அந்த நிஜமான ஆளைத் தேடிக் கண்டுபிடித்துத் தூக்கில் போட்டுவிட்டுத் தான் மதறாஸ் கபேயை வெளியிட வேண்டும் என்று மனுஷ்யபுத்திரர்கள் பேசத் தடையாயிருப்பது எது?
இவ்வளவு கவலைக்கிடையிலும் ஆதங்கத்துக்கிடையிலும் நம்மைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் லீ. தமக்கிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை நேர்மையோடும் ஆண்மையோடும் பயன்படுத்தி, 'ராஜபக்சே திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி' - என்கிற உண்மையை அழுத்தந் திருத்தமாகக் கூறியதன் மூலம், மலேசியத் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் - சிங்கப்பூரின் மூத்த தலைவர் லீ குவான் யூ. மலேசியாவிலிருந்து பிரிந்துபோன 14-வது மாநிலம், சிங்கப்பூர். லீ எப்படியெல்லாம் அதைத் தலைநிமிரவைத்தார் என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் நமது மலேசிய உறவுகள், மனம் திறந்துபேசும் லீயை மனதாரப் பாராட்டுகிறார்கள்.
கோலாலம்பூர், கிளாங், ஈப்போ, கடாரம், பஹாங் - என்று மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் லீ பற்றிய மிக உயர்ந்த அபிப்பிராயத்தைப் பரவலாக ஏற்படுத்தியிருக்கிறது, ராஜபக்சே மனித மிருகம்தான் என்பதை உலகறியப் பறைசாற்றும் அவரது கருத்து.
ஈப்போ கூட்டத்தை முடித்துவிட்டு கோலாலம்பூர் திரும்பியபோது, அங்குள்ள பத்திரிகைகளில் புகைப்படத்துடன் வெளியாகியிருந்த ஒரு செய்தி உற்சாகமளிப்பதாக இருந்தது. அது, சென்னையிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்துக்குச் சென்று லீ-க்கு நன்றி செலுத்தி மாணவர்கள் மலர்க்கொத்து கொடுத்த செய்தி. நன்றி மறப்பது நன்றன்று! அதை உணர்ந்து உடனடியாக நன்றி கூறியிருக்கும் மாணவப் போராளிகளுக்கு நன்றி! மாணவர்களின் இந்த அணுகுமுறை, மற்ற உலகத் தலைவர்களையும் - ராஜபக்சே பற்றி மனம் திறந்து பேசவைக்கும் என்று நம்புகிறேன்.
லீயின் பேச்சு, உலகத் தலைவர்களைப் பேசவைக்கும் முன், நம்மூர் மூத்த தலைவரை வாய்திறக்க வைத்திருக்கிறது என்பது ஓரளவு மகிழ்ச்சியான செய்தி. "தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளி ராஜபக்சே" - என்று லீ கூறியிருப்பதாகக் கூறியிருக்கிறார் கருணாநிதி. 2009ல், இருபத்து ஆறாவது மைலில், ஏழரைக் கோடி தமிழர்களின் முதல்வராக இருந்த சமயத்தில், லீ இப்போது சொன்னதை இவர் சொல்லியிருந்தால் பலவகைகளில் அது பயனளித்திருக்கும். என்றாலும், அப்போது வாய்திறக்காதவர் இப்போதாவது வாய்திறக்கிறாரே என்கிற மகிழ்ச்சி நமக்கு!
இந்த மகிழ்ச்சிக்கு இடையிலும் கருணாநிதியிடம் மனவருத்தத்துடன் ஒரு கேள்வியை எழுப்பவேண்டியது அவசியமாகிவிட்டது. ராஜபக்சே தமிழினப்படுகொலையில் ஈடுபட்டான் - என்பது லீயின் வெளிப்படையான குற்றச்சாட்டு. எங்கேயிருந்து வந்தது - 'போர்க் குற்றவாளி' என்கிற கொசுறு வார்த்தை? 'தமிழினப் படுகொலையில் ஈடுபட்ட கொடிய குற்றவாளி ராஜபக்சே' என்று வெளிப்படையாகச் சொல்லித் தொலைக்க வேண்டியது தானே! லீயின் பேட்டியைக் கூடவா கருணாநிதி (கயிறு) திரிப்பது!
நடந்தது போரா, இனப்படுகொலையா - என்கிற கேள்விக்கு வெட்டொன்று துண்டு இரண்டாகப் பதில் சொல்கிறார் லீ. கருணாநிதி மட்டும் ஏன் இரண்டகம் செய்கிறார்? தம் வீட்டு வெங்காயத்தை இடித்துக் காயவைத்து வடகம் போடுகிற வேலையை கருணாநிதி செய்தால் ஏன் எதற்கென்று யாரும் கேட்கப் போவதில்லை. அந்த வடகம் தான் சொக்கத் தங்கத்துக்குப் பிடிக்கும் - என்பது அவர் பக்க-வாதம் என்றால், நாம் எதிர்வாதம் செய்யப் போவதும் இல்லை. அதே சமயம், லீ வீட்டு வெங்காயத்தைத் தம்மிஷ்டத்துக்கு இடித்துக் காயவைத்து வடகம் போட இவர் முயல்வதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவரைப் போல் இல்லாமல் மனசாட்சியுடன் பேசுகிறார் லீ. தம் இஷ்டத்துக்கு அதற்கு கோனார் உரை எழுத இவர் யார்?
2009ல் நடந்தது போர் அல்ல, திட்டமிட்ட இனப்படுகொலை. தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே ஒன்றரை லட்சம் பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. தமிழ்ப் பெண்களாகப் பிறந்த குற்றத்துக்காகவே பல்லாயிரம் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இது இல்லையெனில் எது இனப்படுகொலை? இவ்வளவு கொடிய இனப்படுகொலைக் குற்றத்திலிருந்து இலங்கையைக் காப்பாற்ற 'இது போர் தான்' என்று புளுகுகிறது அமெரிக்கா. வெட்கமில்லாமல், மானமில்லாமல், நேர்மையில்லாமல், பகுத்தறிவு இல்லாமல் அமெரிக்கா சொல்வதை வரிக்கு வரி வழிமொழிகிறது மார்க்சிஸ்ட். அந்தப் பிரகஸ்பதிகள் போதாதென்று, சம்மன் இல்லாமலேயே ஆஜராகி, ரத்தக் கறை படிந்த இலங்கையின் கையை டெட்டால் போட்டுக் கழுவ முயல்கிறாரே முன்னாள் முதல்வர்... என்ன காரணம் இதற்கு?
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவேகூடாது - என்று அ.தி.மு.க. வலியுறுத்துகிறது. நடந்த இனப்படுகொலையில் இந்தியாவும் கூட்டுக் குற்றவாளி - என்கிற வாதத்தை வலுவாக எழுப்பும் வைகோ, காமன்வெல்த் மாநாடு கொழும்பில் நடக்கவே கூடாது - என்கிறார். இது அவரது கட்சியின் நிலைப்பாடாக மட்டுமில்லாமல், தமிழர்கள் மீது அக்கறை வைத்துள்ள அனைவரது நிலையாகவும் இருக்கிறது. டெசோ பொழுதுபோக்கு கோஷ்டியின் நிலை என்ன? 'காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதை பிரதமர் தவிர்க்கவேண்டும்' என்கிற வீரமணியின் 'ராஜதந்திர' வார்த்தைகள்தான் டெசோவின் நிலையா என்பதை, தண்டவாளத்தில் தலைவைக்க தயாராகிக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமை தெளிவு படுத்தவேண்டும். (வார்த்தைகளுக்குள் ஒளிந்துகொண்டு திருடன் - போலீஸ் விளையாட்டில் பங்கேற்கிற ஆசிரியர்களை ஒதுங்கியிருக்கச் சொல்லிவிட்டு, பெரியார் மாதிரி வெளிப்படையாகப் பேசுகிற பேராசிரியரைப் பேச விடுங்க சுப.வீ.!)
நாட்டில் இவ்வளவு அலப்பரைக்கு இடையே, நா.சா.வின் குரலும் கேட்கிறதே கவனித்தீர்களா? அல்லது கோமாளிகளின் குரல் என்று புறக்கணித்து விட்டீர்களா? அப்படிப் புறக்கணிப்பது சரியல்ல. அது விதூஷகனின் குரல் அல்ல. என்ன நடக்கப்போகிறது என்று காட்சி தொடங்கும் முன்பே மேடை ஏறி அறிவிப்பானே, அந்த கட்டியங்காரனின் குரல் தான் நா.சா.வின் குரல்.
'காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது' என்று ஜெயலலிதா, கருணாநிதி, ஞானதேசிகன் என்று பலரும் வலியுறுத்துவதாக நா.சா. தெரிவித்திருக்கிறார். (சந்தடி சாக்கில் எப்படி ஞானதேசிகனை இந்தப் பட்டியலில் சேர்த்தார் பார்த்தீர்களா... அதுதான் நா.சா.!)
பட்டியல் போட்டதுடன் நில்லாமல், ஜோசியமும் சொல்கிறது புதுச்சேரி கிளி. தமிழகத் தலைவர்களின் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து பிரதமர் நல்ல முடிவெடுப்பாராம். சொல்லிக் கொடுத்ததைச் சொல்லாமல் வேறு எதையாவது பேசுமா கிளிப்பிள்ளை! நார்த் பிளாக்கில் எழுதிக் கொடுத்ததை விமானத்தில் வரும்போது மீண்டும்மீண்டும் உருப்போட்டுவிட்டு, மீனம்பாக்கத்தில் வந்து ஒப்பிக்கிறது கிளி.
பிரதமர் நல்ல முடிவெடுப்பார் - என்று நா.சா. சொல்வதன் பொருள் புரிகிறதா உங்களுக்கு! இதற்கு எதற்கு விளக்கம் என்று ஒதுங்கிக் கொள்ளாமல் உண்மையைச் சொல்கிறேன்...... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..... காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கண்டிப்பாகக் கலந்து கொள்ளப்போவதில்லை. காமன்வெல்த் மாநாட்டுக்குப் போகப்போவதில்லை - என்று அறிவிக்கப் போகிறது இந்தியா. இது நா.சா.வின் ஜோசியம் அல்ல! நாசமாய்ப் போன மன்மோகன் அரசின் வழக்கமான நயவஞ்சகம்.
காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று இந்தியா அறிவிக்குமென்றால், அது பிரதமர் எடுக்கும் நல்ல முடிவாகத்தானே இருக்கும்...... என்று நினைத்தீர்களென்றால் அது தவறு. இந்தியாவின் அந்த முடிவு நல்ல முடிவாக இருக்காது........ தம்பி முத்துக்குமாரின் தமிழில் 'கள்ள' முடிவாகத் தான் இருக்கும். அது என்ன 'கள்ள முடிவு' என்கிறீர்களா? அடுத்த இதழில் அதைச் சொல்கிறேன். என்றாலும் இந்த இதழிலேயே, திட்டவட்டமாகவும் தெளிவாகவும் மீண்டும் ஒருமுறை தெரிவித்து விடுகிறேன் - "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சர்வநிச்சயமாகப் பங்கேற்கப் போவதில்லை!"
(நன்றி-s24) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar