உலகத் தமிழர் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்கவேண்டிய உளவியல் நடவடிக்கைகள் (பாகம்-10)



உளவியல் நடவடிக்கைகள் (Psychological Operations)  என்கின்ற மிக முக்கியமான விடயம் பற்றிய அறிவும் அதளிவும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருப்பது மிக மிக அவசியம் என்பதன் காரணமாக, இந்த விடயம் பற்றி சற்று ஆழமாக நாம் ஆராய்ந்து வருகின்றோம்.
உளவியல் போர் என்கின்ற நடவடிக்கையினுள், எதிரியை கிலிகொள்ள வைப்பது என்கின்றதான உளவியல் நடவடிக்கை பற்றித்தாம் தற்பொழுது ஆராந்துகொண்டு இருக்கின்றோம்.
அதாவது தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான ஒரு முக்கிய உளவியல் நடவடிக்கை பற்றி கடந்த இரண்டு மாதங்களாக இத்தொடரில் விரிவாகப் பார்த்து வருகின்றோம்.
கிறிஸ்துவுக்கு முன்னர் 323 ம் ஆண்டு காலப்பகுதிகளில் உலகத்தின் பல பாகங்களையும் வெற்றிகொண்ட மாபெரும் வீரனும், போரியல் மேதையுமான மகா அலெக்சாந்தர் (Alexander the Great of Macedonia) எதிரிக்கு திகைப்பை ஏற்படுத்தும் உளவியல் நடவடிக்கையை எவ்வாறு மேற்கொண்டார் என்று முன்னர் பார்த்திருந்தோம்.
அதேபோன்று, 1162 ஆம் ஆண்டுகளில் மிகப் பிரசித்தி பெற்ற ஆட்சியையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொண்டு சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த மொங்கோலியத் தலைவர் கெங்கிஸ்கான், இந்த வகையிலான உளவியல் யுதத்தினை எவ்வாறு மேற்கொண்டார் என்றும் பார்த்திருந்தோம்.
இதேபோன்று ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது அமெரிக்கா எவ்வாறு இந்த வகை உளவியல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது என்றும் பார்த்திருந்தோம்.
வியட்னாம் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியில், கனோய் கன்னா (Hanoi Hannah) என்ற பெண் ஊடகவியலாளர் மேற்கொண்டிருந்த உளவியல் போர், உலகின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவம், வியட்னாமின் வியட்கொங் கெரிலாக்களிடம் படுதோல்வியைச் சந்திக்கக் காரணமாக இருந்தது பற்றியும் ஓரளவு விரிவாக ஆராய்ந்திருந்தோம்.
இரண்டாம் உலக மகாயுத்த காலகட்டத்தில் டோக்கியோ ரோஸ் ("Tokyo Rose") என்ற ஜப்பானியப் பெண் அமெரிக்கப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட உளவியல் போர் மற்றும் பீ.பீ.சி செய்தி ஊடகம் ஜேர்மனிய நாசிப்படைகளுக்கு எதிராக மேற்கொண்டிருந்த உளவியல் யுத்தங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்திருந்தோம்.
தமது பலம் தொடர்பாக எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடைய வைத்து, அவனைத் தடுமாறவைக்கும் படியான இந்தவகை உளவியல் நடவடிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு மேற்கொண்டார்கள்?
-இதுபற்றித்தான் தற்பொழுது சற்று சுருக்கமாகப் பார்க்க இருக்கின்றோம்.
விடுதலைப் புலிகளது கரந்தடிப் படையிலான போராட்ட வடிவம் பற்றியும், அந்தப் போராட்டத்தில் அவர்கள் நிகழ்த்திக் காண்பித்த சாதனைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போரியல் வல்லுனர்கள், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகள் பற்றிப் பெரிய ஆச்சரியத்தை வெளியிடுகின்றார்கள். அதிலும் குறிப்பாக, உளவியல் நடவடிக்கைகள் என்கின்ற விடயம் பற்றியும், அதன் பரிமாணங்கள் பற்றியும் சிறிலங்கா இராணுவமே சரியாக அறிந்திராத காலகட்டத்திலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்டிருந்த உளவியல் நடவடிக்கைகள் பற்றி மிகுந்த ஆச்சரியத்தை போரியல் ஆய்வாளர்கள் வெளியிடுகின்றார்கள்.
1970ம் ஆண்டிற்கு முன்னரான காலப்பகுதிகளில் தமிழர்கள் எனப்படுபவர்கள் மலினப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகத்தான் இருந்து வந்தார்கள். மிகவும் பலவீனமான ஒரு இனமாகத்தான் காட்சி தந்தார்கள். அவர்களுடைய அடையாளங்கள் கூட, எளிமையானவைகளாகவும், இனிமையானவைகளாகவும் இருந்தன. குறிப்பாக யாழ்குடாவை எடுத்துக்கொண்டால், யாழ் இசைக்கருவியே அவர்களது அடையாளமாக இருந்து வந்தது. மட்டக்களப்பை எடுத்துக்கொண்டால, பாடும் மீனே அவர்களது அடையாளமாக இருந்து வந்தது.
மறுபக்கம் சிங்கள இனத்தை எடுத்துக்கொண்டால், அவர்களது சின்னம் சிங்கமாகவே இருந்தது வந்தது. அதாவது வீரம் மிக்க ஒரு இனமாகத்தான் சிங்கள இனம் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. கரம் ஒன்றில் வெட்டும் வாளினைப் பிடித்தபடி கம்பீரமாகப் பார்க்கும் ஒரு சிங்கமே சிங்கள இனத்தை அடையாளப்படுத்த சிறிலங்காவின் தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டிருந்தது.
சிங்கள இனம் ஒரு வீரம் மிக்க இனம் என்ற கர்வம் சிங்களவர்களுக்கும் இருந்தது. சிங்களவர்கள் ஒரு வீரம்மிக்க இனத்தவர்கள் என்ற பார்வை தமிழர்களுக்கும் இருந்து வந்தது. (சிங்கள இனத்தவர்களை „மோட்டுச் சிங்களவர்கள்...முரட்டுச் சிங்களவர்கள்..“ என்று சிங்களவர்களுக்கு இருந்ததாக நம்பப்படுகின்ற வீரத்தை தமிழர்கள் ஏற்காமல் ஏற்றுக்கொண்டு வந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில்தான் தமிழர்கள் தமது ஆயதப் போராட்டத்தை தொடங்கினார்கள்.
சாத்வீகப் போராட்டம் என்று சப்பைக்கட்டு கட்டி வீரச் சிங்களவர்களிடம் அடிவாங்கிக் கொண்டிருந்த தமிழர்கள், ஓரு ஆயுதப் போராட்டம் ஆரம்பித்து விட்டார்களாம் என்ற செய்தி ஆரம்பத்தில் சிங்களவர்களுக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபக்கம் தமிழர்களை எடுத்துக்கொண்டால், இயல், இசை, நாடகம் என்ற ஒரு வட்டத்திற்குள் நின்றபடி, மிஞ்சினால் உண்ணாவிரதம், பகிஷ்கரிப்பு என்று போராடிவிட்டு, ~தான் உண்டு தன் வேலை உண்டு| என்றிருந்த தமிழர்களுக்கும், ஆயுதப் போராட்டம் என்பது ஆரம்பத்தில் மிருந்த நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருந்தது.
சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போராட்ட அமைப்புக்களுக்கு மேற்கூறப்பட்ட இரண்டு தரப்பினருடைய உளவியல் ஓட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய தேவை இருந்தது.
அதாவது தமிழர்களைக் கோழைகளாக எண்ணியிருந்த சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவேண்டிய ஒரு தேவை இருந்தது. அத்தோடு, பல தசாப்த காலமாகத் தம்மைப் பலவீனர்களாக எண்ணி வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களுக்கு, ஒரு கம்பீரத்தையும், வீர உணர்வினையும் ஏற்படுத்தவேண்டிய தேவை போராட்ட அமைப்புகளுக்கு இருந்தது.
இந்த உளவியல் தேவையை சந்திக்கும்படியான முதலாவது நகர்வினைச் செய்தவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள்தான்.
தமது ஆயுதப் போராட்ட அமைப்பிற்கான பெயரையும், சின்னத்தையும் 'புலி" என்று உருவகப்படுத்தியதன் ஊடாக, ஒருவித உளவியல் நடவடிக்கையை எதிரி மீதும், தனது சொந்த இனத்தின் மீதும் பிரயோகித்தார் பிரபாகரன்.
பாரிய அளவில் வீரத்தை வெளிக்காண்பித்த சோழப் பேரரசின் சின்னமாக புலிச்சின்னமும், கொடியாகப் புலிக்கொடியும் இருந்ததால், தமிழர்களின் சாம்ராஜ்யம் மீண்டும் உதிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை வெளிப்படுத்தவே பிரபாகரன் ~புலியை தமது அமைப்பின் பெயரிலும், கொடியிலும், சின்னமாக பொறித்திருந்தார்.
இருந்தபோதிலும், இந்தப் புலிச் சின்னம் ஒரு பெரிய உளவியல் நடவடிக்கையை எதிரிகள் மத்தியிலும், தமிழர்கள் மத்தியிலும் இன்றுவரை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கின்றது.
புலி என்பது சிங்கத்திற்கு நிகரான வீரத்தைக் கொண்டது. சிங்கத்தைச் சந்திக்கும் தைரியமும் காட்டில் புலிக்கு மட்டும்தான் உண்டு. தமிழில் உள்ளது போலவே புலி பற்றி நிறை பழமொழிகள் சிங்களத்திலும்  உள்ளன. தமிழர்கள் வீரம் மிக்கவர்கள், தமக்கு அச்சத்தை ஏற்படுத்த வல்லவர்கள் என்கின்ற எண்ணத்தை சிங்களவர்களுக்கு ஏற்படுத்த இந்தப் புலிச் சின்னம் தமிழர் தரப்பிற்குப் பெரிய அளவில் உதவவே செய்தது.
ஆரம்பத்தில் "புதிய தமிழ்ப் புலிகள்“ என்றுதான் தமது அமைப்பிற்குப்  பெயரை வைத்தார் பிரபாகரன் - Tamil New Tigers-  அதாவது TNT என்ற பெயரில்தான் தனது அமைப்பை சிங்களத்திற்கும் உலகிற்கும் அறிமுகப்படுத்தியிருந்தார். ரீ.என்.ரீ. என்பது உலகில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல்யமான வெடிபொருளின் (Trinitrotoluene)  பெயர். அனைவரும் அச்சத்துடன் நோக்கும் அந்த வெடிபொருளின் பெயரிலேயே தமது அமைப்பின் பெரை வைத்ததுன் மூலம் எதிரியை அச்சப்படுத்தும் உளவியல் யுத்தத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டிருந்தார் திரு.பிரபாகரன்.
1976 மே மாதம் 5ம் திகதி தமது அமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றம் செய்து, தமிழீழம், அதன் விடுதலை தொடர்பான அந்தத் தமிழ் புலிகளின் வேட்கையையும் உலகிற்கு வெளிப்படுத்தி ஆச்சரியப்பட வைத்தார்.
எதிரிக்குத் திகைப்பை ஏற்படுத்தி, எதிரியைக் குழப்பமடைய வைத்து, எதிரியை அச்சமடையவைத்தல் என்கின்றதான உளவியல் நடவடிக்கையை கடந்த 30 வருடங்களாக திரு.பிரபாகரன் தனது போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் கச்சிதமாகச் செய்து வந்திருந்தார்.
ஈழப் போராட்ட களங்களில் திரு.பிரபாகரன் அவர்கள் மேற்கொண்ட உளவியல் நடவடிக்கைகளின் ஒருசில பக்கங்களை அடுத்த வாரம் விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்…
nirajdavid@bluewin.ch

Ingen kommentarer:

Legg inn en kommentar