ஜெனீவா-கட்டுநாயக்க-முள்ளிவாய்க்கால்

 essay கடந்த மே 30 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவைத் தொடர்பற்றிய கண்ணோட்டமே இது. மேற்படி பேரவையின் கூட்டத் தொடர், இலங்கையின் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அண்மையில் நிகழ்ந்த அடக்குமுறை, அராஜகம் மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட் டத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ராவய பத்திரிகைக்கு எழுதிய கண்ணோட்டத்தின் தமிழாக்கம்.
 கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமானது. அன்றைய கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் சட்டத்துக்கு முரணான படுகொலைகள் தொடர்பாக ஐ.நாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்தோ கயின்ஸ் உரையாற்றுகையில் எதிர்ப்புக்களை எதிர்கொள்வது தொடர்பாக அதிகாரத்தைப் பிரயோகிக்கும் சந்தர்ப்பங்களில் அரசுகள் சட்டத்துக்கு அமைவாகவே செயற்பட வேண்டியுள்ளது. அத்தகைய சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பெரும் சவாலாக ஆகிவிடக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

மாறுபட்ட விதத்தில் கட்டுநாயக்க சம்பவம்

ஜெனீவாவில் இடம்பெற்ற பேரவையின் கூட்டத்தொடரில் கிறிஸ்தோ கயின்ஸ் அந்தக் கருத்தைத் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில் அக்கருத் துக்கு முற்றிலும் மாறானது எனக் கருதத்தக்க சம் பவம் ஒன்று இலங்கையின் கட்டுநாயக்க முதலீட்டு வலயத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தது. 
 
தமது தொழில்சார் பிரச்சினை ஒன்றை முன்னி றுத்தி உழைக்கும் வர்க்கம் சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தது. முதலீட்டு வலயம் ஒன்றான கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய வீதிகளில் இறங்கி அவர்கள் தமது அந்த எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். பல ஆயிரம் தொழிலாளர்கள் தமது முக்கியமான கோரிக்கை ஒன்றுக்காக வீறுகொண்டு எழுந்திருந்தனர்.
 
அவர்களை அடக்கி ஒடுக்கி விடுவதற்காக இலங்கையில் அதீதமாக அதிகாரகப் பலம் அங்கு பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரச,பொலிஸ் படையின் துப்பாக்கிகள் அவர்கள் மீது திருப்பப்பட்டன. துப்பாக்கி ரவைகள் மழையெனப் பொழிந்தன. சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிராயுத பாணிகளான ஏராளமான தொழிலார்கள் காயங்களுங்கு உள்ளானார்கள். அங்கு சீறிப்பாய்ந்த துப்பாக்கி ரவைகளால் படுகாயமடைந்த  22 வயதான றொசான்சாணக்க பின்னர் உயிரிழந்தார்.
 
இங்கு, வரம்பு மீறிக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அதிகாரப் பலம் எந்தவொரு சவாலுக்கும் உள்ளாகி இருக்கவில்லை. கயின்ஸின் கருத்தும் இங்கு செத்துப் போனது மட்டுமல்லாமல், அரசுக்கு எதிராகக் கோஷமிட்ட றொஷான் சாணக்கவும் உயிரிழந்தார்.இது இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னதாக 1981 ஆம் ஆண்டுக்கு எம்மை அழைத்துச் செல்கிறது. அந்த ஆண்டில் இடம்பெற்ற  வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, அரச வேட்டை நாய்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொன்று போடப்பட்ட சகோதரன் சோமபாலாவுக்கு பின்னர் உழைக்கும் மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் படுகொலைகளுக்குள்ளான முதலாவது நபர் றொஷான் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
 
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் உரையாற் றிக்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட பிரதிநிதி கிறிஸ் தோபர் கயின்ஸ் அத்தகைய சந்தர்ப்பங்களில் உயிர் களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்குவது எவ்வாறு என்பது பற்றி அப்போது விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். 
 
சாத்வீகப் போராட்டங்களுக்கு இடமளியாமை வன்முறைகளைத் தூண்டிவிடுகிறது
 
உலக வரலாற்றில் இடம்பெற்றிருந்த அத்தகைய சந்தர்ப்பங்கள் பலதையும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். அத்தகைய சாத்வீகப் போராட்டங்களுக்கு இடமளிக்கப்படாதபோதுதான் அதை வன் முறைகளாக உருக்கொள்வதாகவும் அவர் தெளிவு படுத்தி இருந்ததார். மக்களுக்கு இருக்கும் ஒன்று கூடும் உரிமையை உறுதிப்படுத்தி வழங்குவதன் மூலம் மோதல்களை குறைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைகின்றது. இரத்தக் களரிகளைத் தடுத்துக்கொள்ள முடிகிறது எனவும் அவர் கருத்து வழங்கி இருந்தார். 
 
அவர் அந்தக் கருத்தை அங்கு முன்வைத்த அதே சந்தர்ப்பத்திலேயே பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள இலங்கையில் அடக்கு முறை ஆட்சியின் காரணமாகத் சாத்வீக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று கிளர்ச்சியாக வெடித்தது. அதை ஒடுக்கி விடுவதற்குத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு அரச அடக்குமுறை பிரிதொரு கோணத்தில் உச்சப்படுத்தப்பட்டிருந்ததை அங்கு காணமுடிந்தது.
 
கிறிஸ்தோபர் ஹயின்ஸின் அடுத்த பிரவேசம் இலங்கையுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்தது. அது இலங்கை இறுதி யுத்தத்தின் போது நிகழ்ந்த மனிதப் படுகொலைகளைக் காட்டும் சனல்4 வீடியோ தொடர்பானதாகும்.அரசு புலிகளுக்கு இடையில் இறுதிக்கட்ட மோதல்கள் உச்சமடைந்திருந்த முள்ளிவாய்காலின் வீடியோ எனவும் அதைச் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். அங்குதான் இந்த இரு தரப்பு யுத்த மோதல்களின் இடையில் சிக்கிக் கொண்ட அப்பாவிகளான தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் மாண்டு போயிருந்தனர்.
 
இந்த வீடியோவின் நீண்ட பிரதியொன்று தம்வசம் உள்ளதாகவும், அது ஐ.நா.அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகள் மூலம் நம்பகமான வீடியோ நாடாவே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கு வைத்து ஹயின்ஸ் தெரிவித்திருந்தார்.
 
இவை அலசிப் பார்க்கப்பட்ட மே 30 ஆம் திகதியன்று, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்களைக் குறித்துக் காட்டும் அறிக்கையெனக் கூறப்படும் பான்கீமூனின் ஆலோசகர் குழுவினரின் அறிக்கையும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை அந்த அறிக்கையை அடியொற்றிச் சென்று இலங்கையில் இடம்பெற்ற யுத்த மோதல்களின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்திருந்த மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பாகச் சுயாதீனமான விசாரணையொன்றின் அவசியம் பற்றி அங்கு வலியுறுத்தியிருந்தமையே அதற்குக் காரணமாயிருந்தது.
 
மனித உரிமை மீறல்கள் இடம்பெறவில்லை என்ற மஹிந்த
 
இலங்கையின் பிரதிநிதிகளாக அந்தப் பேரவையில் வீற்றிருந்த தூதுவர் கிஷேனுகா செனவிரத்னவும்  அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இவற்றை மறுத்துரைக்கும் பதிலுரைகளை ஆற்றினார்கள். யுத்த மோதல்களின் இறுதிக் கட்டத்தில் அரச படைகளினால் சாதாரணக் குடிமக்கள் படுகொலைக்கு உள்ளாகியிருக்கவில்லை என இவர்கள் இருவருமே அடித்துக் கூறினர். இவற்றை விட ஒரு படி மேலாகச் சென்று ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எமது படையினர் ஒரு கரத்தில் துப்பாக்கி களையும் மறுகரத்தில் மனித உரிமைகள் சாசனத்தையும் ஏந்தியவாறே யுத்தக்களம் சென்றனர். எனவே எமது சிப்பாய்கள் மூலமாக எந்தவொரு மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றிருக்கவில்லை. அதற்கான வாய்ப்பே இல்லை எனக் கூறியிருந்தார். இதை வைத்துப்பார்க்கும்போது, அது சம்பந்தமான எந்தவொரு தேடலுக்கும் அவசியமேயில்லையென அவர் மறைமுகமாகக் கோடி காட்டியுள்ளதாகவே கருதமுடிகிறது.
 
ஆனால், அந்தக்கருத்துக்கு முற்றிலும் நேர்மாறாகவே கட்டுநாயக்க சம்பவத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகம் காரணமாக உயிரிழந்த ரொஷானின் மரணத்துக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு முன்னாள் நீதிபதி யொருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அதுவும் ரொஷான் மரணித்து 24 மணித்தியாலங்கள் கடக்கு முன்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
அதுமட்டுமல்ல. இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் பாரதூரமானதொரு குற்றமாகக் கொள்ளப்பட்டு பொலிஸ்மா அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டிய  மேலுமொரு நடவடிக்கையாகப் பெயரளவில் தானும் மேலும் பல பொலிஸ் அதிகாரிகளும் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றைவிட, ரொஷானின் உயிரைக் காப்பாற்றுவதற்கு, அவரை வெளிநாடொன்றுக்கு கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி ஆயத்தங்களை மேற் கொண்டிருந்ததாகவும்   ஊடகங்கள் தெரிவித்தன.
எந்த அளவு மாற்றமான நிலைப்பாடு இது? ஐ.நா. செயலாளர் பான் கீமூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களை நாம் இங்கு நோக்கியே ஆக வேண்டியுள்ளது. அதாவது, யுத்த மோதல்கள் தீவிரம் பெற்றிருந்த இறுதிக் கட்டத்தில் துப்பாக்கி ரவைகள், குண்டுகள் தாக்கிப் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த வன்னிப் பிரதேசத்தில் அந்த காயப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்கு சிகிச்சைகளை வழங்கத் தேவைப்பட்ட மருந்து வகைகளை அங்கு அனுப்பி வைப்பதை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்தியிருந்ததாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. அந்த விதம் நிவா ரண உதவிகளை அனுப்பி வைப்பதை விரைவுபடுத் தாதிருப்பதை முன்னிட்டு இலங்கையரசு வேண்டுமென்றே வன்னியில் சிக்குண்டுள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்ததாகவும், அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
 
அரசின் புதுமையான நடவடிக்கை
 
தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறையில் அரசின் புதுமையான நடவடிக்கை எதுவெனில், அந்த யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டிருந்ததாகக் குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த அதிகாரிகளுக்கு பதவி விலகல்களுக்குப் பதிலாகக் கிட்டியவை ராஜதந்திரப் பதவி நியமனங்களே.கட்டுநாயக்கவில் இடம்பெற்ற பொலிஸாரின் தாக்குதல்கள், துப்பாக்கிப் பிரயோகங்களையும் அடக்குமுறை அரசொன்றின் பீதி நிறைந்த துஷ்டத்தனமொன்றாகவே கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அதற்குப் பொறுப்பான அனைவருக்கும் தகுதி தராதரங்கள் கவனத்தில் கொள்ளப்படாத விதமாகத் தண்டனைகள் வழங்கப்படவேண்டும்  என்று சமுதாயம் எதிர்பார்த்திருக்கிறது. இது விடயத்தில் அரசு அவசியம் மேற்கொள்ள வேண்டியுள்ள நடவடிக்கையொன்றாகவும் அது கருதப்படுகிறது. இதுவே இன்றைய தெற்கின் நிலைப்பாடாகும்.
 
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் இதேவிதமான சாத்வீகப் போராட்டமொன்று இடம்பெற்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தின் காரணமாகத் தமிழ் இளைஞரொருவர் உயிரிழந்திருப்பாரானால் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இடமிருந்திருக்குமா? என்பதும் இங்கு தொக்கி நிற்கும் வினாவொன்றாகும். அதேபோன்று முள்ளி வாய்க்காலைச் சூழவும் கொன்று போடப்பட்ட பல ஆயிரம் மக்கள் பற்றி ஏதாவது பேசப்படுகிறதா? பேசப்படக்கூடுமா? அது தொடர்பாக எந்தவொரு தரப்பு சரி, எவருக்காவது என்றாவது ஒரு நாள் தண் டனைகளை வழங்க இடமுள்ளதா? குறைந்த பட்ச மாக அது தொடர்பாக பகிரங்கமானதுமான சுயாதீன விசாரணையொன்று இடம்பெறக்கூடுமா? இவை நியாய தர்மத்துடன் எடுக்கப்படும் வினாக்களாகும்.ஆனாலும் 1988  1990 என்ற காலகட்டத்தில் கிளர்ச்சிகளோடு சிவில் யுத்தமொன்றும் தெற்கில் இடம்பெற்றது என்பதும், அந்த யுத்தத்தில் படுகொலையுண்ட சிங்கள இளைஞர்களின் சமூகப் புதைகுழிகளைத் தேடுவதற்கும் காணாமல் போனவர்களைத் தேடிக்கண்டறியும் நடவடிக் கைகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதை நாம் மறந்து விடுவதற்கில்லை.

ஜெனீவாவின் இந்த மனித உரிமைகள் பேரவைத் தொடரில் இலங்கை தொடர்பாக எழு கின்ற அனைத்து விடயங்களும் போன்றே இந்தக் காரணியைச் சூழ்ந்தவைகளாகவே அமைந்திருந் தன. யுத்தத்தின் இறுதி நாள்களில் இலங்கையில் இடம்பெற்றுள் ளதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமைகள் பாரதூரமான விதத்திலும் மிகப் பெருமளவிலும் மீறப்பட்டுள்ளன என்பது பற்றிய முறைப்படியான விசாரணயொன்று அவசியமானதா? இல்லையா? என்ற வினாவுக்கும் கூட அத்தகைய ஒன்றுக்கு அவசியமேயில்லை என்ற பதிலே கிட்டுகிறது. தற் போது இலங்கையில் அது தொடர்பாக நிகழ்ந்து வரும் விசாரணைகள் திருப்திகரமானவையே  போதுமானதே என்றும் அடித்துக் கூறப்படுகிறது.
 
 
முறையான விசாரணை தேவை

பாரதூரமான விதத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பாக முறைப்படியான விசாரணையொன்று மேற்கொள் ளப்பட்டேயாக வேண்டுமென்ற யோசனை யொன்றை முன்வைத்துள்ள நிபுணர்குழுவின் அறிக் கையையும் கூட இலங்கையரசு கடுமையாகச் சாடியுள்ளதோடு, அதை முற்றாக நிராகரித்துமுள் ளது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் அழுத் தங்களை விடுப்பதற்கும் அரசு பகீரதப்பிரயத் தனங்களில் இறங்கியது. தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்து நாடுகளையும் ஏவிவிட்டு அந்த அறிக் கையைக் கண்டிப்பதே அரசின் குறிக்கோளாக இருந்தது.

இலங்கையின் இந்த நிலைப்பாட்டை முழுமை யாக ஏற்றுக்கொண்டவை பாகிஸ்தான், கியூபா, சீனா, ஈரான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே. அதேவேளை இலங்கையின் அண்டை நாடுகளான மாலைதீவு, நேபாளம் மற்றும் இந்தியா என்பன அத்தகைய ஒத்துழைப்பை வழங்க முன்வர வில்லை. இங்கு நடுநிலைமை நின்று கருத்து வெளிப்படுத்தியிருந்த பங்களாதேஷ், உள்நாட்டில் என்றாலும் முறைப்படியான விசாரணையொன்று தேவை என்று வலியுறுத்தியிருந்தது. நாடுகளின் சுயாதிபத்தியத்துக்கு மதிப்பளிக்க வேண்டிள்ளது என்றவாறு கருத்து வெளியிட்டிருந்த ரஷ்யா, பெரு மளவில் மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கு மானால் அது தொடர்பாகத் தண்டனைகள் வழங்கப் படல் வேண்டும் எனவும், அதுவும் ஆக்கபூர் மானதும் நடுநிலை கொண்டதாகவும் இடம் பெறவேண்டியுள்ளது எனவும் தெரிவித்திருந்தது.அணிசேரா நாடுகளின் அமைப்பிலிருந்து இலங் கைக்குச் சார்பான எந்தவொரு கருத்தும் வெளியிடப் பட்டிருக்கவில்லை. இது விடயத்தில் இந்தோனே ஷியாவும், ஜப்பானும் கூட வாய் திறக்கவில்லை.
 
தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரையில் கூட நிபுணர் குழுவின் அறிக்கையை அது ஏற்றுக் கொண்டுள்ளது. மனித உரிகைள் ஆணையாளர் மட்டுமல்லாது நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டே அது கருத்து வெளியிட்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமைத்துவத்தை ஏற்றுள்ள நாடான ஹங்கேரியும் கூட நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதோடு சுயாதீனமான விசாரணை ஒன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவும் இலங்கை தொடர்பாக நிபுணர்குழு முன் வைத்திருந்த அறிக்கையைப் பாராட்டியதோடு நில்லாது பொறுப்புக் கூறுதல் மட்டுமல்லாது முறையாக விசாரணை யொன்றின் அவசியம் பற்றியும் கடுமையாக வலியுறுத்தியிருந்தது.
 
இதிலிருந்து இலங்கையரசின் பகீரதப்பிரயத்தனத்தின் பெறுபேற்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். குறிப்பிட்டுக்கூறுவதானால் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையின் கருத்தை அங்கீகரித்து கருத்து வழங்கியிருந்த அனைத்து நாடுகளும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. அதேவேளை, இலங்கையின் சார்பில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்ததூதுவர் திருமதி கிஷேனுகா செனவிரத்ன, நவநீதம்பிள்ளை அவர் வகிக்கும் பதவிக்கு சற்றுப் பொருத்தமற்றவர் எனத் தெரிவித்திருந்தார். இது இலங்கையரசின் தூதுவரொருவர் நவநீதம்பிள்ளைக்கு விடுத்திருந்த கடுமையான தாக்குதலொன்றாகக் கருதப்பட்டது.சுருக்கமாகக் கூறுவதானால் ஜெனிவா 17ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்குக் கிட்டியிருந்த உச்ச பலாபலன் எதுவுமேயில்லை.

Ingen kommentarer:

Legg inn en kommentar