இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலர் பிரதீப்குமார் ஆகியோர் அடங்கிய குழுவின் அண்மைக்கால இலங்கை விஜயம் தொடர்பான தகவல்கள் இரகசியமாக, எவரும் புரிந்து கொள்ள முடியாதவாறு முடிவடைந்தது.
பேச்சு வெற்றியளித்தனவோ, இல்லையோ, ஆனால் இவர்கள் வெளியேறியது தான் தாமதம், காணிகள் மற்றும் பொலிஸுக்கான அதிகாரங்கள் மாகாண சபைக்குக் கொடுக்க முடியாது என்ற பலமான அறிக்கை விட்டார் ஜனாதிபதி மஹிந்த. இது உள்ளூர் தகவல்களுக்காகவே வெளி யிடப்பட்டது என்ற உண்மை தற்போது வெளி வரத் தொடங்கியுள்ளது.
மஹிந்தவை சந்திக்க மூவரணி அலரி மாளிகைக்குச் சென்றபோது வழமையான ராஜீக அந்தஸ்து முறைகள் புறந்தள்ளப்பட்டன. மற்றைய இருவரும் கீழ் மாடியில் காத்திருக்க 45 நிமிடங்களுக்கு அதிகமாக மேனனும், மஹிந்தரும் ஒருவரோடு ஒருவர் என்ற வகையில் உரையாடினர். கீழே காத்திருந்த இருவரது நிலையும் மிகவும் பரிதாபம்.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி மஹிந்த விவரித்தார். எதிர்வரும் செப்ரெம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் சபை கூட்டத்தில் யுத்தக் குற்றச் சாட்டுகள் பற்றி ஆராயப்படுமாயின் இந்தியாவின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும், இந்திய மத்திய அரசு சரியான தருணத்தில் தனக்கு உதவுமென அமைச்சரவை சகாக்களிடம் மஹிந்த கூறினார். செப்ரெம்பரில் இலங்கைக்குப் பாதகமான தீர்மானம் வருமாயின் இந்தியா தன்னாலான அனைத்து வழிகளிலும் எதிர்க்குமென மஹிந்த உறுதிபடக் கூறினார்.
ராஜபக்ஷவுடன் மேனன் நடத்திய பேச்சு இரு நாடுகளுக்கிடையே ஒரு ராஜீக குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை விடயத்தில் தமிழ் நாடும், இந்திய மத்திய அரசும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருக்கும்போது மஹிந்தவுக்கு மேனன் இவ்வாறான சான்றிதழை வழங்கியமையே குழப்ப நிலைக்குக் காரணமாகும்.
இதேநேரத்தில் இந்திய ஊடகங்களின் தகவல்கள் வெவ்வேறு விதமாக உள்ளன. மூவரணி மிகவும் கடுமையான நிலை எடுத்த தாகவும், இலங்கைக்குப் போதியளவு அறிவுரை கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
இந்திய ஊடகங்கள் என்னதான் கூறினாலும் இந்தியாவுடனான நிலை எல்லாமே நன்றாக இருப்பதாக மஹிந்த உறுதி கூறினார். மஹிந்தா விடம் வினாவெழுப்பியவர்களுக்கு... இல்லை... இல்லை நீங்கள் நினைப்பது போல இந்தியா இல்லை என்றதோடு, எங்களோடு எந்த முரண்பாட்டுக்கும் வரவிரும்பவில்லை எந்தப் பிரச்சினையும் இல்லை யென உறுதிப்படத் தெரிவித்தார் மஹிந்த ராஜபக்ஷ.
லுத்ரா வின் செல்வாக்கு
இந்தியாவை வழிக்குக் கொண்டுவர சிவ்சங்கர் மேனனை ஒரு கையிலும், மறுகையில் வேறொரு பெண்ணின் பெயரும் பேசப்பட்டன. ஜனாதிபதி இந்தியாவின் சமன்பாடு பற்றி விவரிக்கும் போது இந்தப் பெண்ணின் பெயரும் பலமாகப் பிரஸ்தாபிக்கப்படும். இந்தப் பெண் பெயர் லுத்ரா . மக்கள் தொடர்புகளுக்கான கம்பனியில் இவர் தொழில் பார்ப்பதாகவும், இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நண்பரெனவும் தெரியவருகிறது. இவருக்கு இலங்கை அரசியலில் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இந்திய அரசியலில் பலம் பொருந்தியவராகவும் இலங்கை அமைச்சர்கள் விமர்சித்துள்ளார்கள்.
பிரணாப் இலங்கையில் யுத்தம் தொடங்கும் போது இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்தது மாத்திரமன்றி தற்போது இலங்கை வளர்ச்சி பற்றிக் கண்வைத்துள்ளார். இலங்கை அரசும் லுத்ராவினூடாகவே முகர்ஜியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. யுத்தம் நடந்த காலத்திலும், முடிந்த பின்பும் இந்தியாவின் உதவியை முகர்ஜியின் ஊடாகவே பெற்றுக் கொண்டார்கள்.
இந்திய மூவரணி இலங்கையை விட்டு வெளியேறிய குறுகிய நேரத்துக்குள் மஹிந்த மேலுமொரு ஏவுகணையைத் தொடுத்தார். வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க மேலுமொரு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்க இருப்பதாகக் கூறியது தான் அது.
Ingen kommentarer:
Legg inn en kommentar