இலங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை!
இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம். சிங்கள ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், சர்வதேச சட்டங்களையும் அளவுகோலாக வைத்து இந்த ஆய்வை நடத்தினோம்.
சர்வதேச சட்டங்கள் சொல்வது என்ன?
போரில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, எதிர்த் தரப்பினர் எந்த விதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது. ஒருவேளை, காயம் காரணமாகவோ அல்லது நோய் பாதிப்பாலோகூட ஆயுதத்தைக் கைவிட்டாலும்கூட, அவர்களிடம் மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். தாக்குதல் நடத்துவதோ... சித்ரவதை செய் வதோ, பிணைக் கைதிகள் ஆக்குவதோ கூடாது. இதைத்தான் சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது.
இலங்கையில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா? நிச்சயமாக இல்லை!
சட்டங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மனிதாபிமானம் இல்லாத செயல்கள் நிறைய நடந்தன. சிங்கள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்துக்கும் இலங்கை அரசே பொறுப்பு. புலிகளைப் பொறுத்த வரை, மனித உரிமை தொடர்பான எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போட்டது இல்லை. இருந்தாலும், அவர்கள் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்து இருந்தால், அதற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
சர்வதேச சட்ட திட்டங்களை மதித்து சிங்கள ராணுவம் போர் நடத்தவே இல்லை. குண்டு வீச்சு, ராக்கெட் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், சித்ரவதை எனப் பல வழி களில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாது காப்பான பகுதிகளிலும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றை அரசு மறுத்தபோதிலும், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததைத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.
போரில் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டவர்கள், காயம் அடைந்து சரண் அடைந்தவர்கள் உள்ளிட்டோரி டம், ராணுவம் மிகக் கொடூரமாக நடந்தது. அவர்களிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நிர்வாண நிலை யில், கண்களையும் கைகளையும் கட்டிக் கோரமாகக் கொலை செய்தனர். இதற்கு வீடியோ காட்சிகள் பலமான சாட்சி.
சர்வதேச சட்டத்தின்படி, 'தாக்குதல் நடத்துபவர் மீது மட்டுமே எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருப்பவர்கள் போராளியா... பொதுஜனமா என்ற சந்தேகம் வந்துவிட்டால், அவர்களை பொதுஜனமாகவே கருத வேண்டும்.’ இந்த விதிமுறையும் சிங்கள ராணுவம் பொருட்படுத்தவில்லை.
இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்பது அரசின் வாதம். ஆனால், உண்மை என்ன? அந்தப் பகுதியில் சிங்கள ராணுவம் வான் வழியாகவும், பீரங்கி மூலமாகவும் நடத்திய தாக்குதல்களில், ஆயிரக்கணக் கான மக்கள் குற்றுயிரும் குலையுயிரும் ஆனார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
'புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை’ என்றும் ராணுவம் சொன்னதில் துளியும் உண்மை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வன்னியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்த எச்சரிக்கைகள், கடைசி வரையிலும் மதிக்கப்படவில்லை.
துயரங்கள் தொடரும்

Ingen kommentarer:
Legg inn en kommentar