முள்ளந்தண்டு முறிந்தவன் மூட்டை சுமக்கப்போன கதை – குணா.கவியழகன் ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு ஆயுதப் போராட்டத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது. ஈழமண்ணில் இந்திய இராணுவம் நிலைகொண்டதனால் போராட்டம் திசைமாறிற்று. ஆயுதப்போராட்டம் இந்திய இராணுவத்திற்கெதிராக திரும்பி தன் பயணத்தில் தடம் புரண்டது. இந்த யுத்தம் எதிர்பார்க்கப்பட்டது என்றும் தவிர்க்க முடியாத வரலாற்று நிர்ப்பந்தம் என்ற கருத்தும் அப்போது வலுப்படுத்தப்பட்டது.
இந்தியாவிற்கு எதிராக யுத்தம் புரிந்து ஈழவிடுதலையை அடைய முடியுமா? அதன் பயணத்திற்காவது உதவுமா? ஆமெனின் அதன் நிகழ்ச்சி நிரல் என்ன? இக்கேள்விகளுக்கு பதில் தேவைப்படாமலே யுத்தம் தேவைப்பட்டது. இந்தியா ஆயுதப்போராட்டத்தின் எதிரியா? இல்லை தமிழ் மக்களின் எதிரியா?
இந்தியா அப்போதைய அரசியல் நிலவரப்படி தனி நாட்டை உருவாக்க ஒத்துழைக்காது என்பது நிஜம். இக்கருத்தை கண்டடைந்த அரசியல் அவதானிகள் விடுதலைப்புலிகளிடம் கருத்தியல் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக இருந்தனர். இவர்களால், தனிநாட்டை ஆதரிக்காத இந்தியாவை போராட்டத்தின் எதிரியாக விடுதலைப்புலிகளின் தலைமை சிந்திப்பதற்கு தூண்டப்பட்டது. இதுவே பின்னர் போராட்டம் நந்திக்கடல் வரை பெரும் துன்பியலாக உருமாற காரணமாயிற்று.
யுத்தத்தில் நந்திக்கடல் கடைசி நாள் வரை உலகில் எந்தவொரு நாடும் முப்பது ஆண்டுகளாக தனிநாட்டுக் கொள்கைக்கு மறைமுகமாகவேனும் ஆதரவு வழங்கவில்லை. கொள்கையளவில் தானும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆயின் உலக நாடுகள் எல்லாவற்றையும் ஆயுதப்போராட்டம் எதிரிகளாக வகுத்துக் கொள்ள வேண்டுமல்லவா!
யுத்தத்தின் கடைசி நாள் வரை உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஈழம் தனிநாடாக பிரிவதற்குரிய அரசியல் நலனை அந்நாடுகள் கொண்டிருக்கவில்லை. அதே போல் இந்தியாவும் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு தான்.
மறுபுறத்தில் சிறிலங்கா அரசின் நோக்கு நிலையில் இந்தியா என்பது சிறிலங்காவின் நிரந்தர ஆதிக்க அச்சுறுத்தல். ஈழப்போராட்டம் சிறிலங்காவின் அரசியல் சிக்கல்.
உண்மையில் ஈழப்போராட்டம் இந்தியாவின் கருவி என்பதே சிறிலங்காவின் கொள்கை விளக்கம் எனவே சிறிலங்காவின் மெய்யான எதிரி இந்தியாவே. ஈழப்போராட்டம் தங்களின் கருவி எதிரியே அன்றி வேறில்லை என்றே சிங்களத் தலைமைத்துவம் அர்த்தம் கண்டிருந்தது. தவிரவும், இந்தியாவின் நலனின் படி ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசிய சமூகமாக தம் தாயகத்தில் வாழ்வது இந்தியாவிற்கு அவசியமானது. தமிழர்களின் தேசிய இருப்பு முக்கியமானது. இந்திராகாந்தி அரசாங்கம் இதை தெளிவாகப் புரிந்தும் வைத்திருந்தது.
இந்த அரசியல் பின்புலத்தில் எதிரியின் பிரதான எதிரியை எப்படி ஆயுதப்போராட்டம் தன் எதிரியாக ஆக்கிக் கொண்டது? ஏன் ஆக்கிக் கொண்டது? இந்திய இராணுவத்தோடு மோதிக் கொள்வதால் எத்தகைய அரசியல் கோட்பாட்டின்படி ஆயுதப் போராட்டம் முன்னேறுவதற்கான வாய்ப்பிருந்தது. இது ஒரு அரசியல் அபத்தம் அன்றி வேறென்ன!
இந்திய இராணுவத்துடனான மோதலுக்கு மக்கள்முன் வைக்கப்பட்ட காரணங்கள் உணர்வுபூர்வமானவை. இதில் திலீபனின் தியாகம், குமரப்பா - புலேந்திரன் வீரமரணம் முக்கியமானவையாக அமைந்தன. இக்காரணங்கள் யுத்தத்திற்கான நிமித்த காரணங்கள். இவையே நியாய காரணம் ஆகிவிடுமா? மானத்தைக் காப்பாற்றுவது, வீரத்தைக் காட்டிக் கொள்வது என்பதுபோன்ற உணர்வுபூர்வமான சொல்லாடல்கள் அறிவுபூர்வமானவையல்ல.
இக்கட்டுரை வியாக்கியானம் செய்ய விளைவது கொள்கைத் தளம்பல்களையே அல்லாமல் கோபம் கொள்வது நியாயமா? இல்லையா? என்பதையல்ல.
மோதலின் மூலம் அரசியல் நல்விளைவைப் பெறக்கூடிய வாய்ப்புவெளி அரசியலில் இருந்ததா என்பது தான் கேள்வி. அரசறிவியலின் எந்தக் கோட்பாடும் அந்த யுத்தத்தை ஒரு முன்னோக்கிய பயணமாக நியாயம் செய்ய இயலாது.
ஈழப்போராட்டம் பயணத்தில் திசை மாறியது பின்னோக்கியது. இதற்கு "ஆயுதப் போராட்டத்தின் பயணத்திற்கு இந்திய இராணுவம் தடைக்கல்லாகியது. இதனால் யுத்தமும் தவிர்க்க முடியாதது" என்ற வரலாற்றின் முன் வைக்கப்பட்ட காரணத்தை எடுத்துக் கொள்வோம்.
இந்தியா, இராணுவத் தலையீடு செய்தால் அது ஈழப் போராட்டத்திற்கு இடையூறானது என்பது ஆயுதப்போராட்ட தலைமையின் முன் தீர்மானமாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறெனின், அதற்கான அரசியல் முன்னுணர்வுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை என்ன? எடுத்த நடவடிக்கை என்ன?
ஆயுதப்போராட்டத்தை ஜெயவர்த்தனா அரசாங்கம் மீது ஒரு அழுத்தப்புள்ளியாக இந்தியா பாவிப்பதென்பது ஓர் அனைத்துலக அரசியல் யதார்த்தம். இந்தியாவின் நலன் மட்டுமல்ல, சோவியத்யூனியனின் அரசியல் நலனும் இதில் உள்ளடங்கி இருக்கிறது. இந்தியா இதன் பொருட்டே இப்போராட்டத்தை ஆதரித்து. அனைத்துலக அரசியல் பரிமாணம் கொண்ட இச்சிக்கலை ஆயுதப்போராட்ட அமைப்பு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக இந்தியா கைவிட்டு விடுமா?
இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு உட்படக்கூடாது என்ற கொள்கைத் தீர்மானம், இந்தியாவை அதன் அடுத்த தெரிவுக்கு தள்ளுவதைத் தவிர வேறு எந்த அரசியல் விளைவைத் தரும். மேலும், மாற்று இயக்கங்கள் மூலம் இந்தியா செல்வாக்கு செலுத்தும் என அஞ்சி அவற்றை தடைசெய்ததன் மூலம் இந்தியாவால் பிரயோகிக்கக் கூடிய இராஜீக முயற்சிக்கு இருந்த கடைசி நூலும் அறுக்கப்பட்டுவிட்டது.
இதனால் இந்தியாவின் இறுதித் தெரிவு நேரடி இராணுவத் தலையீடு என்று ஆகியது. அந்த இராணுவத் தலையீட்டை ஈழத்தமிழர் பிரச்சனையில் தனக்குள்ள தார்மீகக் கடப்பாடு எனும் பெயரிலேயே இந்தியாவால் மேற்கொள்ள முடியும். இது தமிழர்களின் தலைமைத்துவத்தையும், விதியையும் இந்தியாவிடம் தாரை வார்ப்பதைத் தவிர வேறு எதில் போய் முடியும். இராணுவத் தலையிட்டுத் தீர்மானம் எடுத்தது இந்தியா, எடுக்க நிர்ப்பந்தித்தது விடுதலைப்புலிகளின் கொள்கைத் தீர்மானம்.
களத்தில் அரசியல் ரீதியாகவும், ஆயுத ஆட்பல ரீதியாகவும் பலவீனப்பட்டு எதிரிக்கு சந்தர்ப்பத்தை வழங்கி அரசாங்கம் பெரும் படையெடுப்பை செய்ய வைத்தது புலிகளின் தீர்மானம். அது உருவாக்கிய பொருத்தமான சந்தர்ப்பத்தை இராணுவத் தலையீட்டுக்குப் பயன்படுத்திக் கொண்டது இந்தியா
.
இந்தியாவை இராணுவத் தலையீட்டுத் தீர்மானத்திற்கு தள்ளியதும், புலிகளின் கொள்கை நிலைப்பாடே செயலுக்கான சந்தர்ப்பத்தை வழங்கியதும் புலிகளின் கொள்கை நிலைப்பாடே.
செயல் இந்தியாவினுடையதே, ஆயினும், செயல் தூண்டல் புலிகளுடையது. அநீதி இழைத்தது இந்திய இராணுவம் எனின் அநீதியை வரவழைத்தது நாமல்லவா! இந்திய இராணுவத்துடனான மோதலால் தமிழ் வீரமும், தியாகமும் புகழடைந்தது. ஆனால் ஈழத்தமிழர் அரசியல் அறிவல்லவா மாசடைந்தது.
தொடரும்..
*இக்கட்டுரையாளர் ஊடகவியலாளர் [கொழும்பிலிருந்து வெளிவந்த North east monthly ஆங்கில இதழில் எழுதியவர்], விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர், முள்ளிவாய்க்கால் இறுதிநாட்கள்வரை வன்னியில் வாழ்ந்தவர், தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார்.
(நன்றி-குணா.கவியழகன்) GJKMEDIAWORKS TEAM 2012
Ingen kommentarer:
Legg inn en kommentar