ஈழப்போராட்ட திசை வழியொன்று அடைபட்டது - ஏன்? எதனால்? எதற்காக? - 14


சமாதானத்தின் முதல் வெற்றியும் முதற்கோணலும் - குணா.கவியழகன்
எந்தவொரு விடுதலைப் போராட்டமும் அனைத்துலக அரசியல் காரணத்தை ஈர்த்துத்தான் தன் இறுதி வெற்றியைக் காணமுடியும்.

2001 செப்ரம்பர் 11 அமெரிக்கா மீதான அல்கொய்தாவின் தாக்குதலை அடுத்து உருவான அனைத்துலக அரசியல் ஈழப்போராட்டத்தின் மீது கவனம் கொண்டது.

சீனாவிற்கான 'முடக்கற் கொள்கை'யை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில் அமெரிக்கா இருக்க அதற்கான செயற்கதவுகளைத் திறந்துவிட்டது இத்தாக்குதல்.

அமெரிக்கா உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அறைகூவியது.

அமெரிக்காவின் பிரதான இலக்கு இங்கு மத்திய கிழக்கே. அடிப்படைவாத முஸ்லீம் அரசுகளை ஒடுக்கி அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மத்திய கிழக்கின் எண்ணெய் வளக்கட்டுப்பாட்டை தம் கைகளில் மீளுறுதிப் படுத்துவதே அவர்களின் பிரதான நோக்கம்.

இதன் மூலம் இந் நாடுகளில் சீனா ஏற்படுத்திவரும் இரகசிய உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், சீனாவை பொருளாதார ரீதியாக பின்னடைய வைப்பதும், முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளுடன் சீனா கூட்டுச் சேர்ந்து பலம் பெறுவதை தடுப்பதுமே மேற்குலகின் தேவையாகும்.

அடுத்து, ஆசிய நாடுகளுடனான உறவை புதிய உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கேற்ப மறுசீராக்கம் செய்ய அமெரிக்கக் கொள்கைத்திட்டம் வகுக்கப்படுகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற அறைகூவலில் உலக நாடுகள் தம் சிக்கல்களை கையாள ஒன்று சேர்ந்தன.

நவீன யுகத்தில் யுத்தம் ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வாய்ப்புக்கள் மிகமிக அரிது. ஏனெனில் அணுகுண்டு தொழில் நுட்பமும், ஏற்படக்கூடிய பொருளாதார அழிவும் முக்கிய காரணங்களாக உள்ளன. எனவே வல்லரசுகள் தமக்கிடையே ஒரு நேரடி யுத்தத்தை மூட்டிக் கொள்ளப்போவதில்லை. மாறாக அரசு சாராத ஆயுத அமைப்புக்கள் மூலம் அவை எதிராளியை மறைமுகமாகத்தாக்கி பின்னடைய வைக்கவே எத்தனிக்கும். எனவே அரசு சாராத அமைப்புக்கள் போட்டி அரசுகளால் கையாளப்படலாம் எனவும் வல்லரசுகள் அஞ்சுகின்றன.

சாத்தியக் கூறான இத்தகைய யுத்த வடிவத்தைத் தவிர்ப்பதானால் உலகில் அரசு சாராத எந்த ஒரு ஆயுத அமைப்பும் இருப்பதை இன்றைய உலகத் தலைமைகள் விரும்பவில்லை. குறிப்பாய் அனைத்துலக வலைப்பின்னலைக் கொண்ட எந்தவொரு ஆயுத அமைப்பும் எந்நேரத்திலும் அச்சுறுத்தலாகலாம் என்பதே அவற்றின் கணக்கு. எனவே அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது பாதுகாப்புக் கொள்கையின் மிகமுக்கிய அம்சமாகும்.

இந்தக் கண்ணோட்டத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் அனைத்துலக வலைப்பின்னலை மிகத் திறமையாகக் கொண்டிருந்த இயக்கம். எனவே இதன் இருப்பும் உலக அரசியல் தலைமைகளுக்கு அச்சுறுத்தலானது. புலிகளின் அமைப்பு வடிவம் ஒரு முன்மாதிரியாக இருந்து விடவும் கூடாது.

இதைவிட முக்கியமானது மத்திய கிழக்கு மீதான யுத்தத்திற்கு ஆப்கானிஸ்தான் புவியியல் அமைப்பு சாதகமாகக் கொண்ட படை ஏவுதளம். இது ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதனால் ஒரு மாற்றுத் தளத்தை ஏற்படுத்திக் கொள்வது யுத்தத்திற்கு முக்கியமானது. அத்தகைய ஒரு மாற்றுத்தளம் இப்பிராந்தியத்தில் இலங்கை ஒன்று தான். எனவே மேற்குலகிற்கு தம் சார்பு அரசியலும் நிரந்தர அமைதியும் இலங்கையில் அவசியமானது.

அடுத்து இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளுக்கான விநியோகத் தளமாக இலங்கை பயன்பட வேண்டி இருந்தது. இதற்கும் இலங்கையில் நிரந்தர அரசியல் அமைதி தேவைப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் இலங்கையில் இனி ஆயுதப்போராட்டம் தொடர்வதற்கான ஏதுநிலைகள் அனைத்துலக அரசியலில் திட்டவட்டமாக இல்லாது போயிற்று.

விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்த வலையமைப்பு, கட்டமைப்பு, போர்த்திறன் என்பவற்றிற்காகவும், அடிப்படைவாதக் கண்ணோட்டம் எதனையும் போராட்டம் கொண்டிருக்காததனாலும், அடிப்படைவாத உலக ஆயுத அமைப்புக்களுடன் எந்த உறவையும் போராட்டம் பேணாததனாலும், மேலும் தமிழர்களின் தார்மீக நியாயத்தின் பேராலும் ஒரு சமரச வழிமூலம் அமைதியை இலங்கையில் உருவாக்கும் தெரிவை அனைத்துலக சமூகம் எடுத்தது.

வன்னி யுத்தத்தில் அரச படைகள் பாரதூரமான தோல்வி முகம் கண்டிருந்த நிலையில் ஆட்சி மாறிக்கொண்ட அரசாங்கத்திற்கும் அமைதி தேவைப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கும் போர் முனையில் பெற்ற வெற்றியை புதிதாக எழுந்த அனைத்துலக பாதக அரசியல் சூழலில் இருந்து பாதுகாக்க அமைதி தேவைப்பட்டது.

இத்தகைய பொருத்தமான புறநிலையில் இருதரப்பு சமாதான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. புலிகள் இயக்கம் போர் முனையில் தம் வலிமையால் ஏற்படுத்திய இராணுவ சமநிலை, சமதரப்பு தகமைகொண்ட ஒப்பந்தம் உருவாகவும், கட்டுப்பாடு எல்லைக் கோடுகள் ஏற்றுக் கொள்ளப்படவும். புலிகள் கொண்டிருந்த நடைமுறை அரசை ஏற்றுக்கொள்ளவும் வழிசமைத்தது.

தொடரப்போகும் சமரசப் பேச்சுக்கான வலுவான அடித்தளத்தைப் புலிகள் ஏற்படுத்திக் கொண்டனர் என்று சொல்லலாம். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும், அனைத்துலகக் கண்காணிப்புக்குழுவும் இதற்கு மேலும் வலுவுட்டின.

ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்திற்கு நிச்சயமாக எழுந்த பாதகமான அனைத்துலக புறநிலைகளை விடுதலைப்புலிகள் சாதகமாகக் கையாள்வதில் முதற்கட்ட வெற்றியைப் பெற்றனர். போராட்டத்தை உரிய தகமைடன் அனைத்துலக அரங்கிற்கு கொண்டு போவதில் இது ஒரு நிர்ணயமான வெற்றி என்பதில் சந்தேகமில்லை.

அனைத்துலக சக்திகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற அரசியல் முன்னெடுப்பில் தனிநாட்டுக் கோரிக்கை என்ற அடைவு இப்போதைக்கு தமிழர்களுக்கு சாத்தியமில்லை. அதைவிட யுத்தத்தைத் தொடர்வது மிக நிச்சயமாகச் சாத்தியமில்லை.

இந்நிலையில் அகநிலைச் சுயநிர்ணய உரிமையுடன் சுடிய சமஷ்டித் தீர்வை பரிசீலிப்பதாக இணங்கிய இருதரப்பும் நோர்வே பேச்சில் இதனைப் பிரகடனம் செய்தன. இதைவிட சிறப்பான அணுகுமுறை அப்போது புலிகளுக்கு இருக்கவில்லை.

இந்த சமஷ்டித் தீர்வுப் பிரகடனத்தாலும் தொடர்ந்து நடக்கவுள்ள சமஷ்டிப் பேச்சுக்களாலும் சிக்கல்களை எதிர்கொள்ளப் போவது இலங்கை அரசாங்கம் தான். சமஷ்டி என்ற தீர்வை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இனவாதிகள் ஒரு போதும் சிங்கள மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கவில்லை.

தவிரவும் அதிபர் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் அரசாங்கம் இதற்கு ஓப்புக்கொண்டு பேச்சில் ஈடுபடுவது அதை மிகவும் பலவீனப்படுத்தும். எனவே சமஷ்டித் தீர்வுப் பேச்சில் இருந்து பின்வாங்க எத்தனிக்கப்போவது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கம் தான்.

இதனால் பேச்சு மேசையில், அனைத்துலக அரங்கில் அனைத்துலக சமூகத்தின் ஆதரவு, நியாயம் தமிழர் பக்கம் திரும்பவே வாய்ப்புக்கள் இருந்தன. அனைத்துலக சமூகத்தைப் பொறுத்தவரை இனமோதலுக்கான தீர்வில் சமஷ்டி என்பது மிகவும் குறைந்தபட்ச நியாயபூர்வமான தீர்வே. அரசாங்கம் இதிலிருந்து பின்வாங்கினால் அனைத்துலக சமூகம் ஒருபோதும் அதை ஆதரித்து நிற்காது.

அனைத்துலக சமூகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு முறுகலை ஏற்படுத்துவதற்கான சரியான அணுகுமுறையாக இதைக் கொள்ளலாம். அரசாங்கத்திற்கான ஒரு பொறியாகவும் இதைக் கொள்ள முடியும்.

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைமை தனிநாட்டுக் கொள்கைக்காக போராடிய தமது அமைப்பில் அகநிலைக் குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டதைக் காரணம் காட்டி பேச்சின் தலைவர் அன்ரன் பாலசிங்கத்திடம் அதனை பின்வாங்கக் கோரியதும் பின்வாங்கியதும் சமாதானத்தின் முதல் தவறாயிற்று.

அரசாங்கத்திற்கு ஏற்பட இருந்த சிக்கலைத் தாமே விடுவித்துக் கொண்டது மட்டுமல்லாமல் தம்மைத்தாமே அனைத்துலக நெருக்கடிக்குள் தள்ளினர். மேற்கு நாடுகள் புலிகளை விசனத்தோடு அணுகத்தலைப்பட்டன.

நோர்வேயை நண்பனாக்கி நோர்வே மூலம் மேற்கு நாடுகளை அனுசரித்துக் கொள்வது என்ற உள்ளதில் சிறப்புமிகு தெரிவான அணுகுமுறை ஆட்டங்கண்டது. அப்போதைய அனைத்துலகப் புறநிலையில் இத்தெரிவை அனுசரிக்காத மாற்று நடைமுறைகள் சாத்தியமானதாக இருக்கப் போவதில்லை என்பதை உணர்வதில் வறுமைநிலையே இருந்தது. இது தொடரப்போகும் சமாதானத்தில் விழுத்திய முதற்கோணல் ஆகிற்று.

அனைத்துலக உறவில் நேர்விளைவு காணவேண்டிய அணுகுமுறை எதிர்மறை விளைவைக் கண்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாறியது.

தொடரும்..
(நன்றி-குணா.கவியழகன் ) GJKMEDIAWORKS TEAM 2012

Ingen kommentarer:

Legg inn en kommentar